இர்ஷாத் முஹம்மது
பாலின சமத்துவம் என்பதற்குப் பெண்கள் தயாராகவேண்டும், ஒருவருக்கு ஒருவர் பலமாக இருக்கவேண்டும். நமக்கு என்ன வேண்டும் என்பதை நாமே முடிவுசெய்து அதை அடைவதற்கான வழிகளை ஆராய்ந்து சவால்களை எதிர்கொள்ளவேண்டும். அனைத்துலக மகளிர் தினத்தின் ஓர் அங்கமாக 'இந்திய முஸ்லிம் ஒருங்கிணைப்பு' (IM Collective) எனும் இளையர் அமைப்பு இந்திய முஸ்லிம் பெண்களுக்கான மகளிர் கருத்தரங்கை இணையம் மூலம் கடந்த சனிக்கிழமையன்று நடத்தியது.
அறிவார்ந்த நகரம், மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின் பொது, அனைத்துலக தொடர்புப் பிரிவின் துணை இயக்குநர் திருமதி நஸ்ரத் ஹசான், கார்கில் நிறுவனத்தின் அமைப்பு வளர்ச்சி வட்டார ஆலோசகர் திருமதி மரியம் காலித், ஹுவா சோங் கல்விக் கழகத்தின் உயிரியல் விரிவுரையாளர் திருமதி ஷகிலா பானு ஆகிய மூவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்திய முஸ்லிம் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவி திருமதி ஃபஹிமா ஃபர்ஹா நிகழ்ச்சியை வழிநடத்தினார். சமூகத்திலும் வேலையிடங்களிலும் இந்திய முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றியும் எவ்வாறு அவற்றை எதிர்கொண்டு செயல்படுகின்றனர் என்பது பற்றியும் பேச்சாளர்கள் கலந்துரையாடினர்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய முஸ்லிம் குடும்பங்களில் படிப்பை முடித்த உடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது என்றும் அதனால் முடிந்தவரை படிப்பைத் தொடர்ந்து பட்டப்படிப்பை மேற்கொண்ட தமது தனிப்பட்ட அனுபவங்களைக் கூறினார் திருமதி நஸ்ரத்.
தமது பெற்றோர் கொடுத்த ஆதரவுதான் தாம் படித்து நல்ல வேலைக்குச் சென்று செயல்பட உந்துதலாக இருந்தது என்று கூறிய திருமதி நஸ்ரத், திருமணத்திற்குப் பின்னர் அவரது கணவர் உறுதுணையாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள தொழில்துறையான பொறியியல் துறையில் படிக்க விரும்பிய திருமதி மரியம் அந்தத் துறையில் காலடி எடுத்துவைக்கவே பல சவால்களைக் கடந்ததாகக் கூறினார்.
வீட்டில் பெற்றோரைச் சமாளிப்பதுடன் சமூகத்திலும் சிலர் பெண்கள் ஏன் அந்தத் துறைக்குச் செல்லவேண்டும் என்ற கேள்வியை எழுப்பியதை நினைவுகூர்ந்தார்.
இந்தியாவின் பெங்களூரில் பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில், தமது தந்தையிடம் அவரது நண்பர் ஒருவர், "மகள் படிக்க விரும்பியதைப் படிக்கவிடுங்கள்," என்று கூறியதைப் பகிர்ந்துகொண்டார்.
அதிகாரமளிக்கப்பட்ட இந்திய முஸ்லிம் பெண் என்பவர், சமூகம் முன்வைக்கும் எதிர்பார்ப்புகளை ஏற்று நடப்பவர் எனப் பொருள் ஆகாது. தமக்குத் தெரிவுகள் பல இருந்து அவற்றிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் இருக்கவேண்டும் என்று கூறினார் திருமதி ஷகிலா பானு.