தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக ஃபேஸ்புக், யூடியுப் தளங்களில் இந்திய முஸ்லிம் பேரவை "இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்" என்ற தலைப்பில் நேற்று முன்தினம் தமிழ்மொழி நிகழ்ச்சியை நடத்தியது.
நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சி தமிழ்மொழி வாழ்த்துப் பாடலோடு தொடங்கி, மாணவர்கள், இளையர்கள் பங்கேற்ற முத்தமிழ் அங்கத்தில் இயல், இசை, குறுநாடகம் என படைக்கப்பட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களின் உள்ளங்களை ஈர்த்தது.
முழுமையாக மாணவியரே பங்கேற்ற இந்நிகழ்வில் குமாரி தீபிகா பாலமுருகன், குமாரி சிநேகா முரளி, ஆயிஷா யூசுப் அஃப்ஸின் சிறந்த பங்களிப்பை நல்கினர்.
கவிஞர் வேலம்புதுக்குடி பரீஜ் எழுதி திரு அபூதாலிப் பாடிய "தென்றலாய் தவழும்தமிழ்" என்ற தமிழ்மொழி விழா சிறப்புப் பாடல் காணொளி நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தது.
தமிழகத்தின் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் இளம் சிந்தனையாளருமான செல்வி ஜெ.சுல்தானா பர்வீன் அழகிய சொல்லெடுத்து வழங்கிய சிறப்புரை மாணவர்கள், இளையர்கள், பெற்றோருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
நூற்றுக்கணக்கானோர் நேரலையில் இணைந்திருந்த நிலையில், ஒன்றேகால் மணி நேர நிகழ்ச்சியின் முடிவில் ஏறத்தாழ ஈராயிரம் பார்வைகளை ஈர்த்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
முன்னதாக இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் திரு முஹம்மது கவுஸ் வரவேற்று தலைமையுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் மூத்த சமூக அடித்தளத் தலைவர் புதிய நிலா மு.ஜஹாங்கீர் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முஸ்லிம் லீக்-சிங்கப்பூர் செய்திருந்தது. நிகழ்ச்சி நெறியாளராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் திரு அர்ஷத் செயல்பட்டார். இந்திய முஸ்லிம் பேரவை உதவிச் செயலாளர் திரு முஹம்மது பிலால், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கூத்தாநல்லூர் சாஹுல் ஹமீது, கவிஞர் பரீஜ் முகம்மது ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.