வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெற்று வரும் தமிழ் மொழி விழா 2021ன் ஓர் அங்கமாக, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) சென்ற ஞாயிற்றுக்கிழமை 11 ஏப்ரல் 2021 அன்று நகைச்சுவை அரங்கம் ஒன்றை இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடத்தியது.
'தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!' எனும் பிரதான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி அனுமிதா முரளி பாடிய தமிழ் வாழ்த்துப் பாடலுடன் துவங்கியது.
சங்கத்தின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் வழங்கிய தலைமை உரையில், "தமிழ் மொழியை நம் விழிபோல காக்க வேண்டும் என்றும் கல்வி சார்ந்த சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை 103 நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து சாதனைப் படைத்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார். இளையர்களை தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சியின் "மாணவர் அங்கம்" பகுதியில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் முஹம்மது மாதிஹ், 'தமிழை நேசிப்போம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பொதுக்கல்வி உயர்நிலை தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மத்ரஸா அல்ஜுனைட் அல்-இஸ்லாமியா மாணவர் அஃபீப் முஹம்மது ரையான் மற்றும் மேல்நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவரான நாகூர் கனி முஹம்மது ஃபைஸ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு. மனோகரன் சுப்பையா வழங்கிய வாழ்த்துரையில், முதலில் தனக்குள் உற்சாகம் வேண்டும். அடுத்து, தமிழில் பேசுவதற்கான வாய்ப்பு இருக்கவேண்டும். மூன்றாவதாக, தடுமாறி பேசுபவர்களுக்கு நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் உற்சாகம் அளிக்கவேண்டும். அடுத்ததாக, அவ்வப்போது ஆங்கிலம் கலந்து பேசும்போது அதைக் குறைகூறாமல் ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்தோமேயானால் தமிழ்மொழி வளர்ச்சி அதிகமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
முனைவர் மு. அ. காதர் இயற்றி, இசை மணி பரசு கல்யாண் இசையமைத்து 18 சிங்கப்பூர் வாழ் பாடகர்கள் முதன்முறையாக இணைந்து பாடிய "தமிழை நேசிப்போம்" பாடலின் காணொளி இடம்பெற்று நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.
தமிழகத்திலிருந்து சிறப்புப் பேச்சாளராக இணையம் வழி பங்கேற்றதொலைக்காட்சிப் புகழ், பட்டிமன்றப் பேச்சாளர், "நகைச்சுவை நாவலர்" திரு. செ. மோகனசுந்தரம், தமிழ்ச் சுவையும் நகைச்சுவையும் கலந்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் அப்துல் சுபஹான் தமிழ் மணம் கமழ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழ் மொழி விழாவுக்கு "நகைச்சுவை அரங்கம்" மேலும் சிறப்பு வகையில் அமைந்தது.