எஸ்.வெங்கடேஷ்வரன்
சித்ரா பௌர்ணமி கடந்த வாரம் மேகத்தை ஒளியூட்டி வைரம் போல காட்சியளித்தது. அந்த நிலா வெளிச்சத்தைச் சிறப்பித்து 'சிங்கையில் நிலாச்சோறு' என்ற நிகழ்ச்சிக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. கொவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்தேறிய இந்நிகழச்சியில் பண்டிகை உணர்வுக்குப் பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சாம்பார் சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், கத்தரிக்காய் கூட்டு, பகோடா என இனிப்பு முதல் காரம் வரை எல்லா வகை உணவும் சமைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு வாழையிலையில் பரிமாறப்பட்டது. இம்மாதம் 27ஆம் தேதி சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் வெளிப்புற உணவகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"லிஷா பெண்கள் பிரிவு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். நிலாச்சோறு பற்றி இதற்கு முன்பு நான் அறிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்ள இங்கு வாய்ப்பு கிடைத்தது," என்றார் திரு விக்ரம். கடந்த ஆண்டு ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரையில் கிராமத்து பாணியில் இந்த நிகழ்ச்சியை நடத்த விரும்பியதாகவும் கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தால் முடியவில்லை என்றும் கூறினார் லிஷா பெண்கள் பிரிவு தலைவர் ஜாய்ஸ் கிங்ஸ்லி.
இவ்வாண்டு எப்படியாவது நிலாச்சோறு வைத்தே ஆகவேண்டும் என்று லிஷா பெண்கள் குழு உறுப்பினர்கள் தீர்மானித்தனர் என்றும் அவர்களின் எண்ணம் ஈடேறிவிட்டது என்றும் கூறினார் திருமதி ஜாய்ஸ்.
சுவையான உணவுடன் பொம்மலாட்டக் காணொளி அங்கமும் பாடல் வரிகளைக் கண்டுபிடித்து பாடும் போட்டியும் விருந்தினர்களுக்கு இன்ப அனுபவத்தை வழங்கியது.
"நவீன நகர வாழ்விலும் குடும்ப ஒற்றுமை, பெற்றோருக்கு மரியாதை, சக மனிதர்களுடன் பழகும் முறை, அன்புடன் உணவைப் பரிமாறும் கலாசாரம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது ஆகியவை நிலாச்சோறு சாப்பிடுவதில் புதைந்துள்ள வாழ்க்கைப் பாடங்கள். இதைப் பொம்மலாட்ட வடிவில் படைத்தோம்.
"அத்துடன் நாங்களே சுயமாக முயற்சி எடுத்து காணொளியைத் தயாரிக்க முடிவு செய்தோம். வந்திருந்தவர்களும் அதை ரசித்தனர்," என்றார் பொம்மலாட்ட அங்கத்தில் பாட்டி கதாபாத்திரத்திற்குப் பின்னணிக் குரல் தந்த திருமதி புவனேஸ்வரி மகேந்திரன், 53.