ஆர்த்தி சிவராஜன்
பொதுவாக நமது இந்திய உணவுவகைகளை விரும்பி, ருசித்து உண்போம். ஆனால், அவற்றைக் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 'மினியேச்சர்' (miniature) காட்சி வடிவமாக ரசிக்கவும் வைத்துள்ளார் 52 வயது திருமதி மீனாக்ஷி ராம்.
'பாலிமர்' களிமண் (polymer clay) கொண்டு இவ்வாறு சிறிய வடிவமாக படைப்புகளை உருவாக்குவதில் திறமை வாய்ந்தவர் திருமதி மீனாக்ஷி. 'மினியேச்சர்' உணவுகளோடு அவற்றுக்கு ஏற்ற பாத்திரங்களையும் வடிவமைத்து வருகிறார்.
நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செதுக்கும்போது மிகுந்த கவனத்துடன் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தஞ்சாவூர் ஓவியங்கள், சீன ஓவியங்கள், 'எம்பிராய்டரி' (embroidery) போன்ற கலை வடிவங்களில் சுமார் 30 ஆண்டு அனுபவம் இவரிடம் உண்டு.
'பாலிமர்' களிமண்ணைப் பயன்படுத்துவதில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்ற திருமதி மீனாக்ஷி, "வெவ்வேறு கலை வடிவங்களில் ஆர்வம் கொண்டு புது புது முறைகளையும் பொருள்களையும் பயன்படுத்தி செய்து பார்ப்பதே என் வழக்கம். கொவிட்-19 காலகட்டத்தில் பாலிமர் களிமண்ணைப் பயன்படுத்தி என் முதல் படைப்பை உருவாக்கினேன். அது வாழை இலை மேல் தென்னிந்திய உணவுவகைகளைச் சித்திரிப்பதாக அமைந்தது.
"என் குடும்பத்தாரும் நண்பர்களும் பாராட்டியது எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. பாலிமர் களிமண் தொடர்பில் மேலும் ஆராய்ந்து ஒன்பது மாதங்களுக்குப் பின் 30 அனைத்துலக உணவுவகைகளை அடிப்படையாகக் கொண்டு 500க்கும் மேற்பட்ட படைப்புகளை வடிவமைத்தேன். இவை சென்ற ஆண்டு நவராத்திரி கொலுவில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
"வித்தியாசமான சுவையுடைய உணவுவகைகள், பல்வேறு நாடுகளின் உணவுவகைகளை ஆராய்வதை நானும் என் குடும்பதினரும் விரும்புகிறோம்.
"முக்கியமாக இந்திய உணவு எங்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கலாசாரத்திலும் உணவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த ஆண்டு கொலுவிற்காக 'மினியேச்சர்' வடிவத்தில் அதை வெளிப்படுத்த விரும்பினேன்," என்று பகிர்ந்தார்.
ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் பல படிநிலைகள், ஒவ்வோர் உணவிலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, 'இறால் சம்பால்' என்றால் இறால், அரிசி, வெள்ளரிக்காய், முட்டை, வெங்காயம், எலுமிச்சைத் துண்டுகள் ஆகியவை முதலில் தனித்தனி வடிவமாக வண்ணம் பூசப்படாமல் திருமதி மீனாக்ஷி கைவண்ணத்தில் உருவாக்கப்படும்.
ஒவ்வொரு பொருளும் விரும்பிய நிறத்தை அடைய, 'பாலிமர்' களிமண்ணில் வெவ்வேறு நிறங்களைத் தானே கையால் கலவை தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார்.
தானியம், 'நூடல்', தக்காளி விதை என உணவுப் பொருளின் ஒவ்வோர் அங்கமும் கையால் செய்யப்பட்டவை.
பிறகு, உணவுப்பொருள் சரியான நிறத்தை அடைவது, அதன் அமைப்பு, தோற்றம் ஆகியவற்றுக்காக வெவ்வேறு 'கியுரிங்' (curing) முறைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு பொருளையும் சுட்டுத் (bake) தயார் செய்கிறார் அவர்.
அனைத்துப் பொருட்களையும் ஒரு முழுமையான மினியேச்சர் உணவாக இணைப்பதே இறுதி நிலை ஆகும்.
இவை போன்ற 'மினியேச்சர்' வடிவங்களின் அடுத்த தொகுப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் திருமதி மீனாக்ஷி.
'Meena's Creations' என்னும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் மக்கள் ஆர்வத்தின் அடிப்படையில் பல்வேறு 'மினியேச்சர்' படைப்புகள் விற்பனைக்கு வரலாம் என்றார் திருமதி மீனாக்ஷி.
இந்திய மரபுடைமை நிலையத்தில் இவர் உருவாக்கியுள்ள 'மினியேச்சர்' காட்சி விருந்தை இம்மாத இறுதி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.