ஒவ்வொருவரும் வேலையில் கூடுதல் நீக்குப்போக்கை விரும்புகிறார்கள். ஆனால் ஆசிரியர்களின் தினசரி பள்ளி அட்டவணைகள் காரணமாக அவர்களுக்கு இது எளிமையானதாக இருக்காது.
இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை, குறிப்பாக இளம் ஆசிரியர்களிடமிருந்து வருபவற்றைப் பரிசீலிக்கும் கல்வி அமைச்சு, நீக்குப்போக்குடன் கூடிய வேலைக்கான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்கிறது.
2023 ஆண்டிறுதியில் தொடங்கிய மறுஆய்வு ஒன்று, கூடுதல் நீக்குப்போக்கான ஏற்பாடுகளை விரும்பும் ‘புதிய போக்குகளை’ நிவர்த்தி செய்ய ஆசிரியர்களின் அட்டவணைகள் மற்றும் பணிச்சுமையை எவ்வாறு சரிசெய்வது என்பதை ஆய்வு செய்கிறது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
கல்வி அமைச்சு கவனித்துள்ள மற்றொரு போக்கு, ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கைத்தொழில் பாதைகளில் அதிக மாறுபட்ட அனுபவங்களையும் நுணுக்கத்தையும் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் என்று அவர் ஏப்ரல் 24ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சொன்னார்.
அமைச்சின் திட்டங்கள் குறித்த மேல்விவரங்கள் இவ்வாண்டில் பின்னர் வரும்.
மாறிவரும் இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யக் கற்பித்தல் ஊழியரணியை அமைச்சு மறுஆய்வு செய்து வருவதாக திரு சான் கூறினார்.
உதாரணமாக, பள்ளிகள் ஒரு சில ‘நீக்குப்போக்குடன் கூடிய பகுதி நேர’ ஆசிரியர்களைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
“வாழ்க்கையில் உங்கள் வெவ்வேறு பருவங்கள் காரணமாகச் சுமை மாறுபடலாம். நாம் அதை ஏற்பதற்கான வழிகளைக் காணலாம் என நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
“நம்மிடம் போதுமான இசை ஆசிரியர்கள் இல்லை என்று சொல்வோமே. திறன் தேவைகளுக்கு தொழில்துறையிலிருந்து வளங்களை எவ்வாறு கொண்டு வருகிறீர்கள்?
“மேலும், பல்திறன்மிக்க ஊழியரணியைக் கொண்டிருப்பது எப்படி என்பது போன்ற அனைத்திலும் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் ஆசிரியர் தொழிலின் நெறிமுறைகளை ஒருபோதும் இழக்க மாட்டோம்,” என்று திரு சான் எடுத்துரைத்தார்.
மக்கள் தங்கள் வாழ்க்கைத்தொழிலுக்குள் வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.
ஆசிரியர் தொழிலுக்குச் சரியான குணாதிசயங்கள் கொண்டுள்ளவர்களைச் சேர்ப்பது மிக முக்கியம் என்றார் திரு சான். ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு பல்கலைக்கழகத் தொகுதியிலும் முதல் மூன்றில் ஒரு பங்கு பட்டக்கல்வி மாணவர்களைக் கற்பித்தல் துறை ஈர்க்கிறது.
சிங்கப்பூரில் 32,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் இருப்பதாக அண்மைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.