இந்து இளங்கோவன்
கடந்த ஓராண்டு கால கொவிட்-19 சூழல் தமிழாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இணையம் வழி பாடங்களால், தமிழ் ஆசிரியர்கள் அவர்களின் பணியை திட்டமிட்டு மேற்கொள்ளும் முறையே மாறியுள்ளதாக தமிழ் முரசிடம் கூறினார் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு தனபால் குமார்.
"கற்றல் கற்பித்தலில் கொவிட்-19 சூழல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வகுப்பறை கற்றல் கற்பித்தலிலிருந்து இணைய வழி வகுப்புகள், இணைய வழி பாடங்கள் என்று கற்றல் கற்பித்தல் புதிய பரிமாணம் கண்டுள்ளது.
இனி இதுவே முதன்மையான கற்றல் கற்பித்தல் முறையாகவும் அமையக்கூடும்," என்று தமது கணிப்பை அவர் பகிர்ந்து கொண்டார்.
கொவிட்-19 கிருமிப் பரவலால் தமிழ் ஆசிரியர்களின் பணிச்சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறினார் தனபால் குமார்.
"புதிய உத்திகளைக் கற்றுக்கொண்டு தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஒருபுறம். வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் உற்றார் உறவினர்களைச் சென்று சந்திக்கவோ இயலாத சூழல் மற்றொரு புறம். மனதளவில் ஆசிரியர்கள் சோர்ந்திருக்கிறார்கள்."
இருப்பினும், சிங்கப்பூரில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல், ஆசிரியர்களின் முனைப்பால் இணைய வழிக் கல்விக்கு சிறந்த முறையில் மாறியுள்ளது என்ற தனபால் குமார், அதில் இருக்கும் சவால்களையும் சுட்டிக்காட்டினார்.
"குறிப்பாக, உள்ளூர் சூழலுக்கு பொருத்தமான கற்றல் கற்பித்தல் வளங்களை உருவாக்குவது.
"அடுத்ததாக, மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும் பயிற்சிகளை உருவாக்குவது. சமூக அளவில் மொழிப் புழக்கத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பன்மொழிச் சூழலில் கேட்டல், பேசுதல், உரையாடுதல், எழுதுதல் என்று அத்துணை மொழித்திறன்களையும் இணையவழிக் கல்வி மூலம் கொண்டு செல்வதும் மிகப் பெரிய சவால்தான். அதற்கு ஆசிரியர்களுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் மிக அவசியம்."
அதன் தொடர்பில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் இணைய வழிக் கல்விக்கான பயிலரங்குகளையும் பட்டறைகளையும் கொவிட்-19 கிருமிச் சூழல் தொடங்கியது முதல் ஆசிரியர்களுக்காக நடத்தி வருவதை அவர் குறிப்பிட்டார்.
மேலும், கல்வி அமைச்சும், சிங்கப்பூர் ஆசிரியர் கழகமும் அதன் தொடர்பில் பல்வேறு பயிற்சிகள், பல்வகை ஆதரவை வழங்கி வருகின்றன.
அதுமட்டுமல்ல, தமிழாசிரியர்களுக்குத் தேவையான கற்றல் கற்பித்தல் வளங்களையும் வழங்க சங்கம் தொடர்ந்து உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள தமிழ் ஆசிரியர்களைப் பிரதிநிதிப்பதற்காக சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் 1951ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
தொழிற்சங்கம், சமூகத்தையும் மொழியையும் சார்ந்த சங்கம் என பல்வேறு தளங்களில் அது தற்பபோது இயங்கி வருகிறது.
தொடக்க காலத்தில் தமிழ் மொழி மேம்பாட்டிற்கு குரல் கொடுத்து, தமிழ் சார்ந்த கட்டமைப்பு மாற்றங்களை முன்னெடுத்த இச்சங்கம், பின்னர் தமிழ் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மாணவர் மேம்பாடு, கற்றல் கற்பித்தல் மேம்பாடு, சிறந்த கல்வி கொள்கைகள், சமூக அளவில் தமிழ் மொழி வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரு தனபால் குமார் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
கடந்த ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, சங்கத்தின் கவனத்துக்கு உரிய அம்சங்கள் பற்றி அவர் விவரித்தார்.
"தமிழாசிரியர்களின் பணி மேம்பாட்டையும் சுய மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதே எங்கள் மிக முக்கிய பணியாக உள்ளது. அவர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் தரும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளைச் சங்கம் முன்னின்று நடத்தி வந்துள்ளது."
இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பட்டக்கல்வி உருவாக வழி செய்ததில் சங்கம் பங்காற்றியது. அது ஆசிரியர்களுக்கு பலன் அளித்துள்ளது என்றது சங்கம்.
கடந்த 5 வருடங்களில் பல தமிழ் ஆசிரியர்கள் துணை இயக்குநர்களாகவும் இணை இயக்குநர்களாகவும் பதவிகளைப் பெறுவதில் சங்கம் பங்காற்றியதாகக் கூறப்பட்டது.
உதாரணத்துக்கு ஆசிரியர்களுக்காக பணி மேம்பாட்டு பயிலரங்குகள், இணைய வழிக் கல்வி, கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் புதிய உத்திமுறைகள் பற்றிய பல்வேறு பயிலரங்குகளைத் தமிழாசிரியர் சங்கம் கடந்த ஆண்டு முதல் இணையம் வழி நடத்தியது.
இருப்பினும், கொவிட்-19 சூழலால் சங்கத்தால் திட்டப்படி சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.
கடந்த ஆண்டு, மொரிஷியஸ் நாட்டில் நடப்பதாக இருந்தத உலகத் தமிழாசிரியர் மாநாடு தடைபட்டது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் பற்றி சங்கம் யோசித்து வருகிறோம். அதே போல ஆசிரியர்களுக்காக திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நடவடிக்கைகளும் மாற்றி அமைக்கப்பட்டதாக தமிழ் ஆசிரியர் சங்கம் கூறியது.
தமிழ் கற்றல் கற்பித்தல் எத்தகைய மாற்றத்தை எதிர்கொண்டுள்ளத மாணவர்கள், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுவ திலும் தமிழ் ஆசிரியர் சங்கம் பங்காற்றுகிறது. ஆனால் அதில் சவால்கள் கூடியுள்ளன.
"சிங்கப்பூரில் தமிழ்மொழி கற்றல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது என்பதுதான் நிதர்சனம்.
மாறி வரும் மொழிச்சூழல், குடும்பங்களில் தமிழ் பேசாத நிலை அவற்றில் சில.
"தமிழ் நமது அடையாளம். நமது உரிமைக்கான வேர், நமக்கான பாதுகாப்பு என்ற உணர்வு சமூகத்தில் எழ வேண்டும். தமிழை வகுப்பறை மொழியாக அல்லாமல் சமூகத்தின் மொழியாக உருவாக்க வேண்டும். அதுதான் சிங்கப்பூரில் தமிழை வாழும் மொழியாக நிலைத்திருக்க உதவும். அவ்வகையில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தொடர்ந்து சமூகத்தோடு இணைந்து செயலாற்றி வருகிறது." என்ற திரு தனபால் குமார், அந்த வழிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்த சுட்டி மயில் என்ற மாத இதழைப் பள்ளிகளுக்கு சங்கம் அனுப்புகிறது. ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகளை நடத்துவது, சமூக அமைப்புகளோடு இணைந்து செயலாற்றுவது போன்ற வழிகளில் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்த சங்கம் முனைகிறது என்றார் திரு தனபால் குமார்.
அவருக்கு முன், 12 வருடங்களாகத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக செயலாற்றிய திரு சாமிக்கண்ணு, தமிழ் புழக்கத்தை நிலைக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியம் என்று வலியுறுத்தினார்.
"பாடங்களை எவ்வளவு சுவாரஸ்யமாக்கினாலும், பல விதங்களில் மாணவர்களுக்கு பாடத்தை கற்றுக்கொடுத்தாலும் தமிழ் மொழி புழக்கம் குறைந்துகொண்டே வருவது கவலை அளிப்பதாக அவர் கூறினார்.
இன்றைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமிழ் மொழி கற்றலுக்கு வகுப்பறையை மட்டுமே நம்பி இருந்துவிடுகின்றனர். இதனாலேயே பல மாணவர்கள் தமிழில் பேச முடியாமல் சிரமம் கொள்கிறார்கள். இது ஆசிரியர்களின் பணியை அதிகளவு சிரமமாக்குகிறது. இதை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவேண்டும், என்று திரு சாமிக்கண்ணு, திரு தனபால் குமார் இருவரும் கருத்துரைத்தனர்.
"இது தமிழ் மொழி மட்டும் அல்ல. எல்லா தாய் மொழி கற்பித்தல் குழுக்களும் சந்திக்கும் சவாலாகும். அதிகரித்து வரும் ஆங்கில பயன்பாடு, கலப்பு திருமணங்கள் என இதற்கு பல காரணங்கள் உண்டு. தமிழ் உணர்வை ஊட்டுவதில் வகுப்பறையை மட்டும் நம்பியிருக்காமல் வீட்டிலிருந்தே தொடங்கச் சமூக அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்." என்றார் திரு சாமிக்கண்ணு.
ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரி அண்மையில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் தமிழ் இலக்கியங்கள் பற்றிய இளையர்களின் கருத்தை அறிய நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்றின் முடிவுகள் பகிரப் பட்டது. ஆய்வில் கலந்துகொண்ட பலர், தங்களை ஈர்க்கும் விதத்தில் இலக்கிய கலை நிகழ்ச்சிகளில் தங்களது பங்கேற்பை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது.
குறிப்பாக பாட வகுப்புகளில் தமிழ் இலக்கியத்தை கற்றுத்தரும் விதத்தில் மாற்றம் தேவை என்பதை இந்த ஆய்வு காட்டியது. இப்படி இளையர்களுக்கு பிடித்த விதத்தில் அவர்களை ஈர்க்கும் விதத்தில் கற்றல் அமைந்தால் பாடத்தின் மீதும் ஆர்வம் அதிகரிக்கலாம் என்று மாணவர்கள் கருதினர்.