கல்லீரல், கணைய புற்றுநோய்கள், இதய உயிர்காப்புத் தொழில்நுட்பங்கள், சுகாதார நெறிமுறைகள் போன்ற மருத்துவ நுணுக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கும் மருத்துவத் துறையினருக்கும் ஏற்படுத்தி வருகிறார் டாக்டர் ஷெலாட் விஷால்குமார் கிரிஷ்சந்திரா.
2021ம் ஆண்டின் லீ குவான் யூ கல்வி உதவிநிதியை பெற்றவர்களில் அவரும் ஒருவர். முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நினைவாக தஞ்சோங் பகார் குடிமக்கள் ஆலோசனைக் குழு 'லீ குவான் யூ' கல்வி உதவிநிதியை 1991ல் தொடங்கியது.
முன்னனி மருத்துவ நிபுணராக பணிபுரியும் திரு விஷால், டான் டோக் செங் மருத்துவமனை அறுவை சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகராகவும் அறுவை சிகிச்சை அறிவியல் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். இந்தியாவில் மருத்துவ பட்டத்தை பெற்ற இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மேற் படிப்பைத் தொடர்ந்தார்.
தொழில் சார்ந்த அறிவை சக சுகாதார வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூகத்திற்கு பங்களித்து வருகிறார் டாக்டர் விஷால். கல்லீரல், கணையப் புற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நான்கு ஆண்டுகளாக டான் டோக் செங் மருத்துவமனையில் பொதுக் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் இவர் தொண்டூழியராகவும் உள்ளார். மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த முறையில் அத்துறை நுணுக்கங்களைக் கற்பித்த இவருக்கு, 2019ல் மூத்த மருத்துவர்களுக்கான தேசிய சுகாதாரக் குழும கற்பித்தல் விருது வழங்கப்பட்டது.
சுகாதார நெறிமுறைகளில் தனது மேற்படிப்பை தொடர விரும்பும் டாக்டர் விஷால், "நெறிமுறைகளில் உள்ள பலவித அம்சங்கள் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவை. அடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் நோயாளிகளுக்கு தகுந்தவாறு சிகிச்சை அளிக்கவும் இந்த மேற்படிப்பு எனக்கு உதவும் என நம்புகிறேன்," என்றார்.
செய்தி: ஆர்த்தி சிவராஜன்