இந்து இளங்கோவன்
ராணுவத்தில் பொதுவாக பதவி உயர்வு விழாக்களுக்கு, வீரர்கள் தங்களின் வாழ்க்கைத்துணையை அழைத்து வருவது வழக்கம். ஆனால் மூன்றாம் வாரண்ட் அதிகாரி மெரிலின் டேவிட், 38, புதுமையாக 2017ஆம் ஆண்டு பாசிர் லேபா முகாமில் நடந்த தமது பதவி உயர்வு விழாவிற்குத் தந்தை பிலிப் டேவிட்டை அழைத்துச் சென்றார்.
தமது 18வது வயதில் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர விரும்பினார் மெரிலின். ஆனால் தாயாரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. குடும்பப் பொறுப்புகளுடைய ஓர் இந்தியப் பெண், இதுபோன்ற வேலைச் சுமையையும் சமாளிப்பது கடினம் என்றார் மெரிலினின் தாய். ஆனால், மெரிலினின் ராணுவப் பயணம் முழுவதும் கூடவே நின்று இன்றுவரை ஆதரவு அளித்து வருகிறார் அவரது தந்தை பிலிப்.
ஓர் ஆண் பிள்ளைக்கு இருக்கும் அதே வலிமை, ஆற்றல் ஆகியவை பெண் பிள்ளைக்கும் உள்ளது என்று நம்பிய தந்தை பிலிப், மெரிலின் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று மகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்.
மெரிலின், 18 வயதில் அடிப்படை ராணுவப் பயிற்சியின்போது தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "என்னால் முடியாது. நான் ராணுவத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன். என்னை அழைத்து செல்லுங்கள்," என்று கூறினார்.
ஏன், எதற்கு என்று கேட்காமல் திரு பிலிப், "இன்னும் சில நாட்களில் பயிற்சி முடிந்துவிடும். உன்னால் முடியும்," என்று தைரியம் ஊட்டியதை நினைவுகூர்ந்தார் மெர்லின். 2003ல் மெரிலினின் தாயார் காலமானார்.
பிள்ளைகளுக்குக் குறை ஏதும் வைக்க விரும்பாத திரு பிலிப், ஒரு தந்தையாக மட்டும் அல்லாமல் ஒரு தாயாகவும் இருந்து வருகிறார். 2013ஆம் ஆண்டில் தம் மகனின் இறப்பிற்குப் பிறகு மனச் சோர்வால் திரு பிலிப்பிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து இன்றுவரை தம்முடைய மகள், மகளின் கணவர், பேரப்பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் இருந்து வருகிறார்.
திருமதி மெரிலினுக்குத் திருமணமான பிறகும் தந்தை பிலிப்புடன் தமது இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். ஒரு தாயாக திருமதி மெரிலின் தம் பதின்ம வயது மகனை வளர்ப்பதில் நிறைய சவால்களை சந்திக்கும் போதெல்லாம், திரு பிலிப் பிள்ளை வளர்ப்பு தொடர்பில் ஆலோசனை வழங்குவதாகக் கூறினார் மெரிலின்.
"அவரை நன்றாக கவனித்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் எங்களுடன் தங்குமாறு அவரை வற்புறுத்தினோம். ஆனால் இப்போது அவர்தான் எங்களைப் பார்த்துக்கொள்கிறார்.
"என் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் பார்க்கும் முதல் நபர் என் அப்பா. அவர்களை அன்புடன் பார்த்துக்கொள்கிறார். எனக்கும் என் கணவருக்கும் எத்தகைய பிரச்சினை வந்தாலும் அறிவுரை கூறி சமாதானப்படுத்துவார்," என்றார் திருமதி மெரிலின்.