ப. பாலசுப்பிரமணியம்
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர், சிறுவனாக இருந்தபோது, வெளிநாட்டில் முனைவர் படிப்பை மேற்கொள்ள விருப்பப்பட்டார் அவரின் தாயார் திருமதி எலிசபத் நாயர்.
அதற்குச் சம்மதித்ததுடன் திரு விக்ரம், அவரின் இளைய சகோதரர் இருவரையும் அந்த இடைப்பட்ட காலத்தில் பார்த்துக்கொண்டார் தந்தை திரு பிரபாகரன் நாயர். அவர்கள் அடிக்கடி தாயாருக்குக் கடிதம் எழுதவும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசவும் வகைசெய்தார் வழக்கறிஞரான திரு பிரபாகரன்.
குடும்பப் பொறுப்புகள் என வரும்போது ஆண்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை திரு விக்ரம் நாயருக்கு உணர்த்தியவர் அவரின் தந்தையே.
"ஒவ்வொரு வாரமும் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்குவதைத் தம் பொறுப்பாக எடுத்துக்கொண்டார். என் சிறு வயதில் கண்டிப்பாக இருந்தார், பின்னர் பெரியவனாகும்போது நண்பர் போல் பழகினார், இன்று எந்நேரமும் வேலைக்கும் வாழ்க்கைக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கும் ஆசானாக உள்ளார்," என்றார் திரு விக்ரம் நாயர்.
திரு விக்ரம் நாயருக்கு 2015ஆம் ஆண்டில் மகள் இந்திரா பிறந்ததைத் தொடர்ந்து தந்தை என்ற புதிய பொறுப்பு அவருக்கு வந்தது.
மகளை ஒவ்வொரு வாரமும் தவறாமல் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி படிப்படியாக மகளுடன் அதிக நேரம் உறவாடுவதற்கு நேரம் ஒதுக்கினார்.
இவ்வாண்டு ஆறு வயதாகும் மகளுக்குக் கணிதம், ஆங்கிலப் பாடங்களைக் கற்பித்து வரும் திரு விக்ரம், அன்றாடம் மகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரும் இரவு நேரத்திலும் முழு கவனம் செலுத்தி அவரை இதர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகிறார். வீட்டில் விளையாடுவது அல்லது சிங்கப்பூர் அறிவியல் நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகள், தந்தை மகள் பந்தத்தை வலுப்படுத்துகின்றன.
"எனக்குச் சமைக்க பிடிக்கும். அதனால் சமைக்கும்போது மகளையும் அதில் ஈடுபடுத்துவேன். குடும்பப் பொறுப்புகளில் யார் எதைச் செய்கிறார் என்ற பாகுபாடு கூடாது, அதனைச் சிறப்பாகச் செய்து முடிப்பதுதான் முக்கியம். ஆணும் பெண்ணும் எல்லா வீட்டுப் பொறுப்புகளையும் ஈடுகொடுத்து செய்ய முடியும் என சொல்லிக்கொடுத்து என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள்," என்றார் திரு விக்ரம்.
வழக்கறிஞர் பணி, நாடாளுமன்ற உறுப்பினருக்கான கடமைகள் மத்தியில் தந்தைக்கான பொறுப்புகளுக்கும் நேரம் வகுப்பது சவாலாகத் தோன்றினாலும் எல்லா பொறுப்புகளுக்கும் நேரத்தைத் திட்டமிட்டால் சமாளித்துவிடலாம் என்றார்.
பிள்ளைகளின் உலகிற்குச் சென்று அவர்களுடன் இணைந்து விளையாடும் தருணம் பொன்னானது என்று விளக்கிய திரு விக்ரம், தம் மகளின் பிள்ளைப் பருவம் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.
தந்தை என்ற நிலையில் தமது பயணம் புதிது என்றாலும் அதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ள அவரின் தந்தைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாக திரு விக்ரம் கூறினார்.