கடந்த 1981ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் அதிகாரபூர்வ துவக்கம் கண்டதிலிருந்து அங்கு பாதுகாவல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் 60 வயது திரு ஆறு முகம் கருப்பையா.
'செர்ட்டிஸ்' நிறுவனத்தின் விமானப் பாதுகாப்புப் பரிசோதனை பிரிவின் மூத்த நிர்வாகியின் வாழ்வாதாரம் தொடங்கியது இங்குதான்.
தம் வாழ்க்கைத் துணையான முன்னாள் பாதுகாவல் அதிகாரியான கோ. இந்திராணியைக் காதலித்து 1987ஆம் ஆண்டு திருமணம் செய்த நினைவுகளின் பிறப்பிடமும் இதுவே.
சுமார் 400 பாதுகாவல் அதிகாரிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் இவர், சாங்கி விமானத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் பாதுகாப்புப் பரிசோதனை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்கிறார்.
"2003ஆம் ஆண்டில் சார்ஸ் சிங்கப்பூரை தாக்கியபோது விமான நிலையப் பாதுகாப்பு அதற்குத் தயாராகவில்லை. ஏனெனில் அக்கிருமி பற்றிய போதிய விவரமில்லை. அதற்குப் பிறகு வந்த ஹெச்1என்1 போன்ற கிருமிகளின் பரவலை நன்கு சமாளித்தோம். 'சார்ஸ்' அனுபவம் அதற்கு கைகொடுத்தது.
"கொவிட்-19 நிலவரத்தை நாம் நன்கு சமாளித்தபோதும் பாதிப்பில் இதுதான் ஆகக் கொடியது. நாற்பது ஆண்டு அனுபவத்தில், சாங்கி விமான நிலையத்தில் ஆகக் குறைவான எண்ணிக்கையில் விமானங்களும் பயணிகளும் சென்றுவந்துள்ளனர்," என்று கூறினார் திரு ஆறுமுகம்.
கடந்தாண்டிலிருந்து விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், அங்கு பணியாற்றிய செர்ட்டிஸ் பாதுகாவல் அதிகாரிகள், சமூக இடைவெளித் தூதர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர். இதனால் நிறுவன ஆட்குறைப்பைத் தவிர்க்க முடிந்தது.
டெல்டா வகை கிருமிப் பரவலை தடுக்க, தற்போது சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 14,000 பேர் மூன்று தனிப்பிரிவுகளாக வெவ்வேறு முனையங்களில் பிரிக்கப்பட்டனர்.
அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள பாதுகாவல் அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் தனிநபர் பாதுகாப்பு உடைகள் அணிந்திருப்பர். ஊழியர்கள் தங்களது பிரிவைவிட்டு மற்றொரு பிரிவுக்கு செல்வது இயலாது.
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது மற்றவர்கள் சற்றுத் தள்ளியே இருப்பது திரு ஆறுமுகத்துக்குப் பழகிவிட்டது.
அவர் பணியாற்றும் இடத்தில்தொற்று அபாயம் அதிகம் என்ற அச்சம் அதற்குக் காரணம். இதனால் பணிநாட்களில் அவர் பயணி இருக்கையில் அமர்வதில்லை.
தேவையிருந்தால் மட்டும் ஓய்வு நாட்களில் வெளியே செல்வதாகவும் முன்னெச்சரிக்கை யாக சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்றார் திரு ஆறுமுகம்.
இப்படி சிறுசிறு தியாகங்களைச் செய்தவாறு பணியில் தீவிரமாக இறங்குவதற்கு இவர் சொல்லும் காரணம் இது.
"வெளிநாடு செல்வது பாதுகாப்பானது என்ற செய்தியை பயணிகள் தங்கள் நாட்டினரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது சாத்தியமாவதற்கு இங்கு விமானப் பாதுகாப்பு உயர்தரத்துடன் விளங்க வேண்டும், அதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் தயார்," என்று தம் வேலையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.