ஆர்த்தி சிவராஜன்
நீரின் முக்கியத்துவத்தை காலம் தோறும் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தி வருகின்றன.
திருக்குறளின் முதல் 10 குறள்கள் கடவுள் சிறப்பு பற்றியவை. 11ஆம் குறளில் வான் சிறப்பைப் பாடுகிறது. 'நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது' என்று எழுதினார் திருவள்ளுவர்.
தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத செழிப்பான காலத்திலேயே அதன் சிறப்பு பற்றி வள்ளுவர் எழுதியதை வைத்து, தண்ணீரின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும் என கூறினார் விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர் திரு சோ. தர்மன்.
தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வாசிப்பு விழா 2021இல் சிறப்பு எழுத்தாளராக அழைக்கப்பட்ட திரு சோ. தர்மன், நீரின் முக்கியவத்துவம் பற்றி பேச பொருத்தமானவர்.
நீர் மேலாண்மை, நீர்வளங்கள் குறைவது ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு அவர் எழுதிய 'சூல்' நாவல், 2019இல் இந்தியாவின் உயரிய சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
நூலக வாரியம் ஏற்பாடு செய்த நிகழ்வில், பழமையான வேளாண்தொழிலால் ஏற்பட்ட நன்மைகள், நீர் நிலை மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு, நவீனமயமாக்கல் காரணமாக வேளாண் தொழிலின் சீரழிவு, வனவிலங்குகள் அழிந்து போகும் அச்சுறுத்தல், இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்து அவர் உரையாற்றினார்.
27 ஜூன் மாலை 6 மணி அளவில் தமிழ் நூலகச் சேவைகள் பேஸ்புக் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
1980களிலிருந்து எழுதிவரும் திரு தர்மன் தூர்வை, கூகை உள்ளிட்ட 4 நாவல்களும் 76 சிறு கதைகளும் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாவலுக்கு இடையே கிட்டதட்ட 10 ஆண்டுகள் இடைவேளை எடுத்து, கலாசாரம் மற்றும் பண்பாடு சார்ந்த தகவல்களைச் சேகரிப்பதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு இவரது 'பதிமூனாவது மையவாடி' நாவல் வெளியானது. கிருஸ்துவ கன்னியாஸ்திரிகளைப் பற்றிய இந்த நாவலை எழுத கன்னியாஸ்திரி மடத்தில் 10 ஆண்டுகள் வசித்தார்.
"சூல் நாவலின் பெயர் காரணம் குறித்து பேசிய திரு தர்மன், "10 மாத கர்ப்பிணிப் பெண்ணை நிறை சூலி என்போம்.
"உலகத்திற்கு ஓர் உயிரை புதிதாக கொடுக்கக் கூடிய தாயை சூலி என்று சொல்கின்றபோது, பறவைகள், மனிதர்கள், விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள், பூச்சிகள் போன்ற பல்வகை உயிரினங்களுக்கு நீர்நிலைகளும் கம்மாய்களும் தாயாக விளங்குவதை நான் உணர்த்த விரும்பினேன். ஆதலால் ஒவ்வொரு நீர்நிலையையும் சூலி என்றேன்" என்று விளக்கினார்.
"இந்தியாவில் 60-70% மக்களுக்கு விவசாயமே தொழில். ஆனால், இதை மையப்படுத்தி வரும் படைப்புகள் மிகக் குறைவு. இதைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளதால், விவசாயம் சார்ந்த எழுத்துக்களைத் தேடி படிப்பேன்," என்றார் திரு தர்மன்.
ஓரிரு மாதங்களில் 'வெளவ்வால் தேசம்' என்ற புதிய நாவலை வெளியிட இருக்கிறார் திரு தர்மன். பிரிட்டிஷ் ஆட்சி, ஜமீன்தார்களின் வாழ்க்கை, சுதந்திரக் காலம் ஆகியவற்றைப் பற்றி இந்த நாவல் ஆராய்ந்துள்ளது.
'சோ. தர்மனுடன் ஒரு சந்திப்பு', வாசிப்பு விழா 2021ன் தொடர்பில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது.