ப. பாலசுப்பிரமணியம்
வேலை செய்தால் அது சேவைத் துறையாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பயணிகள் சேவை அதிகாரியாக 19 ஆண்டு களுக்கு முன் வேலையில் சேர்ந்த திருமதி வீ. கெளரி.
மக்களுடன் இயல்பாகப் பேசி உரையாடுவது அவருக்குப் பிடித்த மான ஒன்று. அதற்கு மேலாக, பிறருக்கு உதவும் மனமும் படைத்தவர் இந்த 41 வயது நிலையத் துணை நிர்வாகி.
ஒருமுறை டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் ஒரு சிறுவன் நீண்ட நேரமாக யாருடைய துணையுமின்றி நடமாடுவதை கவனித்து அவனை கெளரியிடம் அழைத்துச் சென்றார் ஒரு நடுத்தர வயது ஆடவர்.
ஆடவரின் கைபேசி விவரங்களை வாங்கிக்கொண்டு சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததும் அவரிடம் தெரிவிப்பதாக திருமதி கெளரி கூறினார்.
அடுத்து வந்தது சிக்கல். திருமதி கெளரி கேட்ட கேள்வி களுக்கு அச்சிறுவன் எந்த பதிலும் அளிக்காது அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.
"காணாமல் போன சிறுவர்கள் அழத் தொடங்குவர் அல்லது தங்களது பெற்றோரின் தொடர்பு எண்ணைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வர். ஆனால் இச்சிறுவன் மெளனம் சாதித்தான்.
"அவனது நம்பிக்கையை பெறுவதற்குச் சற்று வித்தியாசமாக யோசித்தேன்," என்று கடந்தாண்டு வாரஇறுதி நாள் ஒன்றில் டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் திருமதி கெளரி.
திருமதி கெளரிக்கு 11 வயது மகள் இருக்கிறார். தமது மகளுக்கு பிடிக்கும் கேலிசித்திரத் தொடர்கள் அவருக்கும் பிடிக்குமா என்று சிறுவனிடம் கைபேசியில் காண்பிக்கத் தொடங்கினார்.
சிறுவன் மெல்ல மெல்ல உற்சாகம் அடைந்து பதிலளிக்க தொடங்கினான். வண்ணம் தீட்டும் போட்டி இருக்கிறது, அதில் கலந்துகொள்கிறாயா என்று சிறுவனை ஆர்வப்படுத்தி அவனை அந்நடவடிக்கையில் ஈடுபடுத்தினார்.
கெளரி மீது சிறுவனுக்கு நம்பிக்கை வரவே, தனக்கு கவனிப்பு பற்றாக்குறை அதியியக்கச் சீர்குலைவு (ADHD) குறைபாடு இருப்பதைப் பகிர்ந்துகொண்டதோடு தாயாரின் தொடர்பு எண்ணையும் அவரிடம் சொன்னான்.
விவரம் தெரிந்து பதறிப்போன சிறுவனின் பெற்றோர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
பல்மருத்துவரான தாயார் வீட்டில் அன்று சிறுவனைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவனை வேலையிடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.
தாயார் பணியில் ஈடுபட்ட நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சிறுவன் உலாவச் சென்றதில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
"என் மகள் காணாமல் போனால் எனது மனம் எவ்வாறு பதைக்குமோ, அதே பதைபதைப்பை அத்தாயாரிடம் கண்டேன். இருவரையும் சேர்த்து வைக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்," என்று தெரிவித்தார் திருமதி கெளரி.
இதுபோன்ற பல்வேறு வகைகளில் பயணிகளுக்கு உதவிவரும் திருமதி கெளரிக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகப் போக்கு வரத்துப் பிரிவின் உன்னத வாடிக்கையாளர் சேவை விருது இம்மாதம் வழங்கப்பட்டது.
"பணியில் மட்டும் இல்லாமல் எல்லாருக்கும் உதவும் மனப்பான்மையைக் கொண்டிருக்கும் சமுதாயமாக நாம் உருவெடுக்க வேண்டும் என்பது என் ஆசை.
இவ்விருது எங்கள் நிறுவன ஊழியர்களையும் உற்சாகப்படுத்தும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார் திருமதி கெளரி.