இந்து இளங்கோவன்
நாற்பது வருடங்களுக்கு மேலாக தாதியாக பணிபுரிந்துவரும் தமது அம்மா காந்திமதியைப் பார்த்து தாமும் ஒரு தாதியராக வேண்டும் என்ற கனவு ஷஷிக்கு பதின்ம வயதிலிருந்தே இருந்தது.
சாதாரண நிலைத் தேர்வுக்கு பிறகு 2007ஆம் ஆண்டு தாதிமைத் துறையில் பட்டயம் பெற்று, 2009ஆம் ஆண்டு தேசிய சேவையை முடித்த கையோடு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாக தனது பணியைத் தொடங்கினார் ஷஷி சந்திரசேகரம், 35.
ஷஷி சிறுவயதாக இருக்கும்பொழுது பெற்றோர்களில் ஒருவராவது எப்போதும் பிள்ளையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஷஷியின் தாய் இரவு நேர வேலைக்கும் தந்தை பகல் நேர வேலைக்கும் சென்றனர். இதுபோன்ற பல தியாகங்கள் புரிந்து வேலைப் பளுவையும் குடும்பத்தையும் நன்றாக நிர்வகித்து வந்தார் ஷஷியின் தாயார் திருமதி காந்திமதி.
"எவ்வளவு சோர்வாக இருந்தாலும் தாதிமைத் துறையின் மீதுள்ள பற்றும் அர்ப்பணிப்பும் எனது அம்மா விற்கு துளியும் குறையாது. வீட்டிற்கு வந்து வேலை இடத்தில் நடந்த பல சுவாரசியமான கதைகளை எங்களுக்குச் சொல்வார். அவர் சந்தித்த நோயாளிகள், அவர்களது உடல் பிரச்சினைகள், அவற்றை அவரது குழு எவ்வாறு கையாண்டது போன்ற பல கதைகளைக் கேட்டிருக்கிறேன். இது என்னுள்ளே தாதியாக வேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டியது." என்றார் ஷஷி.
கிருமித்தொற்று தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் சுகாதாரத் துறைக்கும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் புதுப்புது பொறுப்பு களும் சவால்களும் வந்து சேர்ந்தன.
சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்த் தொற்று கண்டறியப்படு வதற்கு முன்பு, ஜனவரி 2020இல் அவசர மருத்துவப் பிரிவில் தலைமைத் தாதி பொறுப்பை ஷஷி ஏற்றுக்கொண்டார்.
அப்போது அவசர மருத்துவப் பிரிவு, கிருமிப்பரவலை எதிர்கொள்ளும் முயற்சியில் பெரும் பங்கு வகித்தது. கிருமிப்பரவலுக்கு மத்தி யில் அவசரகால சிகிச்சையை பாதுகாப்பாக வழங்குவதற்காக தனது 250 பேர் கொண்ட வலுவான குழுவை ஷஷி வழி நடத்தி னார்.
ஒரு தாதியாக சிறக்க, முக்கியமாக சேவை மனப்பான்மை அவசியம் என்கிறார் ஷஷி. எதிர் பார்ப்புகள் இன்றி சேவை புரியும் எண்ணம் இருந்த தால்தான் எவ்வித இன்னல்கள் வந்தாலும் ஒரு தாதியராக தமது கடமையை ஊக்கமுடன் செய்ய முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.
ஒவ்வொரு நாளும் தாதிமைத் துறை இவருக்கு பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறது. அவர் சந்திக்கும் நோயாளிகள், அவர்களது குடும்பங்கள், சக தாதியர்கள் என ஒவ்வொரு வரும் அவரவர் வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர்.
"ஒரு முறை வாகன விபத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார். அவர் விபத்தில் சிக்குவதற்கு முன்பு வீட்டில் தனது மனைவியுடன் பெரிய சண்டை நடந்துள்ளது. கோபத்துடன் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றபோதுதான் சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இது, அவரது மனைவிக்கு பெரிய வேதனையையும் வருத்தத்தையும் அளித்திருக்கும். கணவனை இறுதி யாக சந்தித்த தருணம் ஒரு நல்ல நிறைவான தருணமாக அமைந்திருக்கக்கூடாதா என்று அவர் நினைத்துக் கொண்டிருப்பார்.
"இந்தச் சம்பவம் என்னுள் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. எப்போதும் நமது அன்பிற்குரியவர்களை அலட்சியப்படுத்தாமல் கிடைக்கும் நேரமெல்லாம் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அது உணர்த்தியது." என்றார் ஷஷி.
நமது வாழ்க்கை நிச்சயமற்றது, ஒவ்வொரு தருணத்தையும் நமக்கு பிடித்த வகையில் நம்மைச் சுற்றி இருப்போருக்கு நன்மை தரும் வகையில் வாழப் பழக, ஷஷிக்கு தாதிமைத் துறை கற்றுத் தந்துள்ளது.
சிங்கப்பூர் இன்று தாதியர் தினத்தை கொண்டாடுகிறது. ஆகஸ்ட் 1 சிங்கப்பூரில் தாதிமை துறை வளர்ச்சியின் ஆரம்பக்காலத்தைக் குறிக்கிறது.