கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கத்திலிருந்து நாடு இன்னும் விடுபடாதிருக்கும் நிலையில், வெளிநடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் குடியிருப்பாளர் களுக்கு உற்சாகம் ஊட்ட தொண்டூழியர்கள் கைகோர்த்துள்ளனர்.
கிருமித்தொற்றுக் கட்டுப்பாடு களைக் கடைப்பிடித்தவாறு தேசிய தினத்தை முன்னிட்டு வீடமைப்புப் பேட்டையை அலங்கரிப்பதற்காக பீஷான் ஈஸ்ட் பிரிவு மூன்றின் வசிப்போர் குழு களத்தில் இறங்கியது.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அந்த வசிப்போர் குழுவில் தொண்டூழியராகச் செயல்பட்டு வருகிறார் திருமதி ரா. சித்ரா நாயுடு, 55.
'போத்தல்' மூடிகள், 'பிளாஸ்டிக்' மூடிகள், தாளால் ஆன தட்டுகள் போன்ற மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு அலங்காரப் பொருட்களை உருவாக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டார்.
குடியிருப்பாளர்களையும் இதில் ஈடுபடுத்தும் நோக்கில் அவர்களிடமிருந்து ஜூன் மாதத்திலிருந்து அலங்காரத்திற்குத் தேவையான மறுபயனீட்டுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
'ரெட் லயன்ஸ்' வான்குடை சாகச வீரர்களைக் கெளரவிக்க, பிளாஸ்டிக் மூடிகளைக் கொண்டு சிறிய வான்குடை மாதிரிகள் செய்யப்பட்டன.
பழைய குறும்வட்டுகளுக்கு வெள்ளைநிற வண்ணம் தீட்டி நீண்ட சிவப்புநிறத் துணியில் அவற்றை கோர்வையாக இணைப்பது, பல்லின மக்கள் கைகோர்த்து நிற்கும் கேளிக்கைச் சித்திரங்களை தாளால் ஆன தட்டுகளில் வரைவது ஆகியவை இந்த அலங்காரங்களில் அடங்கும்.
திருமதி சித்ராவும் அவரது சகத் தொண்டூழியர் திருமதி ஷரிந்தர்ஜித் கோர் என்பவரும் இரண்டு மாதங் களாக இவற்றைப் பொறுமையாக வீட்டில் இருந்தவாறு வடிவமைத்தனர்.
வடிவமைத்த அலங்காரங்களை வீடமைப்புப் பேட்டை புளோக்கு களின் மூன்று இணைப்புப் பாதைகளில் பொருத்துவதற்கு அவர்களது கணவன்மார் உதவி புரிந்தனர்.
"அலங்காரங்களைப் பொருத்திய போது சக குடியிருப்பாளர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்தது மகிழ்ச்சியைத் தந்தது.
"குடியிருப்பாளர்கள் அலங்காரங்களின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதும் மிகுந்த திருப்தி அளித்தது," என்றார் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் முன்னாள் ஊழியரான திருமதி சித்ரா.
"ஒரு சிங்கப்பூரராக கலையின் வழி தேசிய தினக் கொண்டாட்டத்திற்குப் பங்களிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பேறு. எங்கள் முயற்சி குடியிருப்பாளர்களுக்கு தேசிய தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த உதவும் என்று நம்புகிறேன்," என்றார் 49 வயது இல்லத்தரசி ஷரிந்தர்ஜித் கோர்.
'ஒன்றிணைந்த நமது சிங்கப்பூர் உணர்வு' என்ற இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருவை மையமாகக் கொண்டு அலங்காரங்கள் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட திருமதி சித்ரா, ஒற்றுமையுடன் இத்தொற்று காலக்கட்டத்திலிருந்து மீண்டு வருவோம் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
- செய்தி: ப.பாலசுப்பிரமணியம்