இந்து இளங்கோவன்
உறவுகளைப் பிரிந்து, வேறு நாடு வந்து, மாறுபட்ட சமூகத்தோடு வித்தியாசமான சூழலில் வசிக்கின்றனர் நமது வெளிநாட்டு ஊழியர்கள். நம் சாலைகள், வீடுகள், கட்டடங்கள் எனப் பலவும் அவர்களது வியர்வையின் முத்துகளாக நிற்கின்றன.
நமது மாணவர்ச் செல்வங்கள் சமூகத்தின் அடித்தளம். அவர்கள் சமூகத்தில் காண்பவை, அனுபவிப்பவை, கற்றுக்கொள்பவை ஆகியவற்றைக் கொண்டு தங்களின் எண்ணங்களைச் செதுக்கிக்கொண்டு வருபவர்கள். இப்படி நமது சமூகத்தின் இரு முக்கியப் பிரிவினர் சந்திக்கவோ கலந்துரையாடவோ வாய்ப்புகள் அதிகம் இருப்பதில்லை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது சமூகம் என்ற கருப்பொருளைக் கொண்டு அமைந்த இந்த ஆண்டின் சிங்கப்பூர் கவிதை திருவிழா.
'கவிதைகளில் ஒன்றிணைப்பு: மாணவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் இடையிலான கவிதை சொல்லாடல்' என்ற இந்த நிகழ்வில் ஏழு வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூரில் வசிப்பது பற்றியும் தங்களுடைய சொந்த நாடுகளில் அனுபவித்த வாழ்க்கை பற்றியும் கவிதை வடிவில் படைத்தனர் இவர்கள்.
மேலும் தொடக்கக்கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அறுவர், சமூகம் சந்திக்கும் சவால்கள் பற்றி கவிதை பாணியில் வெளிப்படுத்தினர்.
பெஞ்சுரு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. பல மாதங்கள் சுதந்திரமாக வெளியே போய் வர முடியாமல் தங்கியிருக்கும் சிவநேசனுக்கு ஆறுதலாகவும் வேதனைகளின் வடிகாலாகவும் இருப்பது கவிதைகள்தான் என்கிறார்.
மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் கொள்முதல் துறையில் பணிபுரிந்துவரும் சிவநேசன், 'இது நம்முடைய பொம்மை நிறத்தை மாற்றலாம் வா!' என்ற சிந்தனையைத் தூண்டும் கவிதையை எழுதி படைத்தார். வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இதுபோன்ற கவிதை நிகழ்வுகள் நல்லதொரு தளமாக அமைவதாக கூறினார். மேலும், சிங்கப்பூர் மாணவர்களின் கண்ணோட்டத்தை அவர்களது கவிதைகள்வழி அறிந்துகொண்டது தமக்குப் புத்துணர்ச்சி தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் பலரால் வெகுவாகப் பேசப்பட்ட '$alary Day' (சம்பள நாள்) என்னும் 13 நிமிட குறும்படத்தை எடுத்த வெளிநாட்டு ஊழியர் மாதவனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தனது கவிதையைப் படைத்தார். இம்மாதம் 8ஆம் தேதியன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர் சாம்ராஜ் வழிநடத்தினார். 'என்று தானே சொன்னார்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, 'பட்டாளத்து வீடு', 'ஜார் ஒழிக' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் போன்றவை இவரது படைப்புப் பட்டியலில் அடங்கும்.
பங்கேற்பாளர்களின் கவிதைகளைக் கேட்டு தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதோடு கவிதை எழுதுதல், கவிதை உருவாக்கம் போன்றவற்றைப் பற்றிய தனது எண்ணங்களையும் பார்வையாளர்களிடம் சொன்னார் கவிஞர் சாம்ராஜ்.
"கவிதைகளைச் சிறப்பாக எழுத நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும். நிறைய வாசிக்க வாசிக்க உலகைப் பற்றிய உங்களது புரிதலும் அறிவும் வளரும். இது ஒரு கவிஞனாக நீங்கள் வளர, வழி செய்யும். உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் உள்வாங்கிக்கொண்டு அதிலிருந்து கற்பனைத் தூண்டல் பெற்று கவிதைகளை உருவாக்கும்போதுதான் உங்களது தனித்துவம் வெளிப்படும்," என்று பங்கேற்பாளர்களுக்கு அறிவுரை கூறினார் கவிஞர் சாம்ராஜ்.
சிங்கப்பூர் கவிதைத் திருவிழா 2015ஆம் ஆண்டு தொடங்கி, ஏழாவது ஆண்டாக வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஈராண்டுகளுக்கு ஒருமுறை கவிதை விழா நடத்தும் சிங்கப்பூர் இலக்கிய மாநாடும் சென்ற வாரம் சிறப்பாக நடைபெற்றது.
ஒரு சமூகமாக நல்ல எண்ணங்களையும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வையும் வளர்க்கும் வண்ணம், விதைகளாக, கவிதைகளை விதைக்கும் நோக்கத்தைக் கொண்டது இவ்வாண்டின் கவிதை திருவிழா. மேலும், கவிதை விழாவையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கவிதைப் போட்டியின் தமிழ்ப் பிரிவு வெற்றியாளர்களுடனான கவியாடலும் இவ்வாண்டு நடைபெற்றது. 'சமூக (க)விதைகள்: தேசிய கவிதைப் போட்டி வெற்றியாளர்களுடன் ஒரு கவிக்கூடல்' என்னும் இந்த நிகழ்வு, வெற்றியாளர்கள் தங்கள் கவிதைகளைப் படைக்கும் ஒரு தளமாகவும் பார்வையாளர்களுக்கான கற்றல் தளமாகவும் அமைந்தது.
'சமூகம்' பற்றிய கலந்துரையாடல்
சிங்கப்பூர் இலக்கியக் கருத்தரங்கு 2021ன் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் இலக்கியம் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜூலை 31 அன்று மெய்நிகர் நிகழ்ச்சியாக நடந்தது. இதில் சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்து சிவானந்தம் நீலகண்டன் கலந்துகொண்டு பேசியிருந்தார்.
'சமூகம்' என்ற கருப்பொருளில் நடந்தேறிய இக்கலந்துரையாடல், நான்கு மொழி இலக்கியங்களிலும் எவ்வாறு உணரப்பட்டு பிரதிபலிக்கப்பட்டுள்ளது, எழுத்தாளர்கள் எதிர்காலத்தில் எந்தெந்த அம்சங்களைக் கையாள்வது ஆகியவற்றைக் குறித்துக் கருத்துகள் பகிரப்பட்டன.
"சுதந்திர சிங்கப்பூரில் இதுவரை தமிழ் இலக்கிய விளைச்சல் சுமார் 500 புத்தகங்கள். கம்பத்திலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியதுமுதல் 'சார்ஸ்' கொள்ளைநோயை எதிர்கொண்டதுவரை பல்வேறு தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் முதல் அரைநூற்றாண்டு கால இலக்கியத்தில் பதிவாகியுள்ளது. ஆயினும், சிக்கலான அம்சங்கள் அரிதாகப் பேசப்பட்டன. ஆனால் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. லதா, சித்துராஜ் பொன்ராஜ், எம்கே குமார், உமா கதிர் போன்றோர் தங்கள் புனைவுகளில் பல இன சமுதாயத்தில் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்முதல் பெண்கள், விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கைவரை நுணுக்கமான சித்திரங்களைத் தீட்டிக்காட்டுகின்றனர்.
"சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் 200 ஆண்டுகால வரலாற்றைப் பல்வேறு கோணங்களிலிருந்து உயிரோட்டமாகத் தீட்டிக்காட்ட நமது எழுத்தாளர்கள் முயலவேண்டும். குறிப்பாக உள்ளூர் இளையர்கள் தமிழ் இலக்கியத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முன்வரவேண்டும்," என்று கலந்துரையாடலில் தெரிவித்தார் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்த சிவானந்தம் நீலகண்டன்.
சிங்கப்பூர் கவிதை விழா நிகழ்ச்சிகளை நீங்கள் சிங்கப்பூர் பொயட்ரி ஃபெஸ்டிவல் (Singapore Poetry Festival) ஃபேஸ்புக், இணையப்பக்கம், யூடியூப் தளம் ஆகியவற்றின்வழி காணலாம்.