ப. பாலசுப்பிரமணியம்
திருமதி சாந்தி பாலமுருகனின் வகுப்பில் ஒரு பாடலை அறிமுகப்படுத்தினால், உடனே மாணவர்கள் கோலாட்டம் ஆடலாமா, கும்மி அடிக்கலாமா என்று ஆர்வத்துடன் கேட்கின்றனர். சுவா சூ காங் புளோக் 10 பிசிஎஃப் ஸ்பார்கல்டொட்ஸ் பாலர் பள்ளி தமிழ் வகுப்புக்குச் செல்ல மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இவ்வாண்டு கல்வி அமைச்சின் தாய்மொழிகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் சிறந்த பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியருக்கான விருதை வென்ற திருமதி சாந்தி,
சுவாரசியமான கற்பித்தல் முறைகள் வழி சிறுவர்களின் மொழி ஆர்வத்தைத் தூண்டி வருகிறார்.
தமிழ் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து, அவற்றிற்கு ஏற்ற பாரம்பரிய நடனங்களையும் காணொளி வழி காண்பித்தும், ஈடுபடச் செய்தும் சுவாரசியமான கற்பித்தல் முறையை மேற்கொள்கிறார். இது சிறார்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதோடு, ''உறியடி போன்ற விளையாட்டுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும்போது பார்வையற்றவர்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை விளங்கிக்கொண்டு, அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் போன்ற தகவல்களையும் அவர்கள் உள்வாங்கிக் கொள்கின்றனர்," என்று தம் கற்பித்தல் முறை பற்றி விளக்கினார், 43 வயது ஆசிரியர் திருமதி சாந்தி.
புத்தகம் வாசித்தலைக் காட்டிலும் வெளிப்புறப் பாரம்பரிய விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் சிறார்களுக்குக் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. அதன் வழி சொல்ல விரும்பும் கருத்துகளை எப்படி மனதில் பதிய வைக்கலாம் என்பதில் திருமதி சாந்தியின் கவனம் அடங்கியுள்ளது.
வகுப்பில் ஒவ்வொரு சிறாரும் தன் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வகுப்பறையின் முன் பேசுவதற்கு வாய்ப்பை தாம் வழங்குவதாகக் குறிப்பிட்ட திருமதி சாந்தி, இது மாணவர்களது தன்னம்பிக்கையை வளர்த்து, கூச்ச சுபாவத்தைப் போக்கவும் உதவுகிறது என்றார்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழத்கத்தில் கணித துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்ட திருமதி சாந்தி பாலமுருகன், திருமணத்திற்குப் பிறகு, தம் இரு பிள்ளைகளையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். பிள்ளைகள் வளர்ந்ததும் 2014ஆம் ஆண்டிலிருந்து பகுதி நேர பாலர் பள்ளி ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது பிடித்துப்போக, கணித பட்டதாரியான திருமதி சாந்தி, சீட் கல்விக் கழகத்தில் ஒன்றரை ஆண்டுகால ஆரம்பக்கல்வி பட்டயம் பயின்றார். அதன் பிறகு, 2019ல் சுவா சூ காங் புளோக் 10 பிசிஎஃப் ஸ்பார்கல்டொட்ஸ் பாலர் பள்ளியில் சேர்ந்தார்.
"சிறார்களுடன் வலுவான நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள், அவ்வாறு செய்ய, இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்வர்' என்றார் திருமதி சாந்தி.
திருமதி சாந்தியுடன் பொங்கோல் ஷோர் புளோக் 174டி 'பிசிஎஃப் ஸ்பார்கல்டொட்ஸ்' பள்ளி ஆசிரியர் திருமதி சண்முகம் கீதாவும் புன் லே புளோக் 262 'பிசிஎஃப் ஸ்பார்கல்டொட்ஸ்' பள்ளி ஆசிரியர் திருவாட்டி மு. ஷர்மிளா தேவியும் தாய்மொழி கற்பித்தலில் தகுதி (மெரிட்) விருதுகளுடன் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனர்.
கல்வித்துறை நிபுணர்களும் விருது பெற்ற ஆசிரியர்களும் பங்கேற்ற 'தாய்மொழிகளின் கருத்தரங்கு'