இந்து இளங்கோவன்
மாணவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கே முன்னுரிமை என்று தங்கள் கடமையை ஆற்றிய 17 ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான அதிபர் விருதுக்கு இவ்வாண்டு முன்மொழியப்பட்டனர். இவர்களில் ஏழு பேருக்கு இம்மாதத் தொடக்கத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப் விருது வழங்கிச் சிறப்பித்தார். முன்மொழியப்பட்டவர்களில் திருமதி சௌம்யா சதீஷ், திருமதி ஜெயசுதா விஜேய், டாக்டர் ராமானுஜம் பரமானந்தம் மூவரும் இடம்பெற்றனர்.
சிறுவயதில் வீட்டில் தமது தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் திருமதி ராஜனைப்போல வேடமிட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுப்பதுபோல் விளையாடுவார் திருமதி ஜெயசுதா விஜேய்.
பின்னாளில் அதே திருமதி ராஜனுடன் இணைந்து தமிழ் ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. தமக்கு தமிழ் கற்றுக்கொடுத்த தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தேசிய கல்விக் கழக ஆசிரியர்கள் என அனைவரும் இவருடைய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக இவர் தெரிவித்தார். தமிழ் மொழியை இவ்வளவு சுவாரசியமாக கற்றுத்தர முடியுமா என்று தம்மை வியக்க செய்தவர்கள் இவர்கள் என்று ஆச்சரியம் கலையாமல் கூறினார் செங்காங் தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரியும் திருமதி ஜெயசுதா.
புகலிடமாகும் தமிழ் வகுப்புகள்
தமிழ் வகுப்பு, மொழிக் கற்றலையும் தாண்டி தமிழ் மாணவர்களுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்கவேண்டும் என்று இவர் உறுதியாக நம்புகிறார்.
திருமதி ஜெயசுதாவின் கற்பித்தல் அணுகுமுறை உருவானதில் அவருடைய தந்தைக்கு முக்கிய பங்குண்டு. தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வு இப்போது மாணவர்களுடன் பிணைப்பை உருவாக்க இவருக்கு வழி செய்கிறது.
"சிறுவயதில் என் தந்தை எப்போதும் நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்வார். நகைச்சுவை காட்சிகளை என்னுடன் சேர்ந்து பார்ப்பார். அவருக்கு இப்போது 70 வயதாகிறது. அவ்வப்போது எனக்கு வாட்ஸ்அப் வழியாக நகைச்சுவைகளையும் காணொளிகளையும் அனுப்புவார். நான் எவ்வளவு சோர்வாக. கவலையாக இருந்தாலும் அவரது குறுந்தகவல் எனது முகத்தில் புன்னகை மலரச்செய்யும்."
"மாணவர்கள் என்னுடன் இயல்பாக பழகவும் என்னுடன் நெருக்கமாக உறவாடவும் நகைச்சுவையை நான் பயன்படுத்துகிறேன். எல்லா மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி அவர்களது தேவைகளையும் கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்வதே இதன் நோக்கம்," என்றார் அவர்.
கதை சொல்வதை ஒரு கற்பித்தல் உத்தியாகப் பயன்படுத்தும் திருமதி ஜெயசுதா, தமது மாணவர்களுடன் தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அவர்களிடம் தமிழ்மொழி ஆர்வத்தைத் தூண்டுவதற்காக, இளம் வயதில் விவாதப் போட்டியில் கலந்துகொண்டபோது எடுத்த காணொளிகளை மாணவர்களுக்கு போட்டுக்காட்டுவார்.
"காணொளிகளை பார்த்துவிட்டு, பிள்ளைகள் சிரித்துக்கொண்டே, 'திருமதி விஜேய், உங்கள் தலைமுடி மிகவும் வேடிக்கையாக இருக்கிறது!' என்று கூறுவர். ஆனால் அவற்றைப் பார்த்துவிட்டு எனது ஆசிரியரால் இவ்வளவு துணிவுடன் தமிழில் பேச முடிந்தால் என்னாலும் முடியும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் எழும்," என்று சிரித்தபடி சொன்னார்.
பிரியாத, மறக்கமுடியாத மாணவர்கள்
தமது முன்னாள் மாணவர்களில் பலர் இன்னும் தம்முடன் தொடர்பில் இருப்பதாக கூறிய திருமதி ஜெயசுதா, தமது நினைவில் நீங்காத ஒரு மாணவரை பற்றி பகிர்ந்துகொண்டார்.
"அவருக்கு தமிழ்ப் பாடம் என்றாலே அச்சம். தமிழில் பேச மிகவும் சிரமப்பட்டார். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் 'தமிழில் படி, எழுது' என்று வற்புறுத்தாமல் அவர்களது மனப்போக்கை புரிந்துகொள்வது அவசியம்," என்றார் திருமதி ஜெயசுதா.
அந்த மாணவருடன் அதிக நேரம் செலவு செய்து, ஊக்கம் தந்து, படிப்படியாக வழிகாட்டி அவரிடம் தமிழ் ஆர்வத்தையும் திறனையும் வளர்க்க உதவினார் திருமதி ஜெயசுதா.
இந்த மாணவர் பின்பு 'ஓ' நிலை தேர்வில் பள்ளியிலேயே முதல் நிலையில் தேர்ச்சிபெற்று அனைவரையும் பெருமையடைய செய்தார்.
இன்றும் அந்த மாணவர் தம்மைப் பார்க்கும் போதெல்லாம், "வணக்கம் ஆசிரியர். நலமாக இருக்கிறீர்களா?" என்று தமிழில் நலம் விசாரிக் கும்போது பெருமையாக இருப்பதாகக் கூறினார் திருமதி ஜெயசுதா. இதுபோன்ற நினைவுகள்தான் இந்தப் பணியை தொடர்ந்து நீடிக்க இவருக்கு உத்வேகம் தருகின்றன.
"நான் எப்போதும் ஒன்றை சக ஆசிரியர்களிடம் வலியுறுத்துவேன். மற்றவர்களிடம் கூறும் அறிவுரைகளை நாம் முதலில் பின்பற்றவேண்டும். சக தமிழ் ஆசிரியர்களுடன் உரையாடும்போது தமிழில் பேச வேண்டும் என்று சொல்வேன். நாமே ஓர் உதாரணமாக இல்லா விட்டால் மாணவர்களை தமிழில் பேச சொல்ல முடியாது," என்றார் இந்தத் தமிழாசிரியர்.