இர்ஷாத் முஹம்மது
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தாய்நாட்டிலிருந்து புறப்பட்டு பிழைப்பு தேடி சிங்கப்பூர் வந்த பங்ளாதேஷியரான பாரிக் அப்துல், கை நிறைய சம்பாதித்து அடுத்த முறை ஊர் திரும்பும்போது திரு
மணம் செய்துகொள்வதாகத் தாய், தந்தையரிடம் வாக்குக் கொடுத்
திருந்தார்.
நான்கு ஆண்டுகள் வேலை பார்த்து, பிறகு விடுப்பில் பங்ளாதேஷுக்குத் திரும்பி திருமணம் செய்துவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு வர அவர் திட்டமிட்டிருந்தார்.
பெற்றோர் திறன்பேசி வழியே மணமக்களை ஆசிர்வதிக்க, அவரது திருமணம் மெய்நிகர் தளத்தில் திறன்பேசி வழியே சென்ற மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது.
மணக்கோலத்தில் காக்கி புக்கிட் வட்டாரத்திலுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் தமது படுக்கைக்குப் பக்கத்திலேயே 33 வயது பாரிக் அப்துல் இருந்தார். மணப்பெண், பங்ளாதேஷ் நாட்டின் சிராஜ்கஞ் மாவட்டம் ரந்துனிபாரி நகரில் உள்ள பாரிக் குடும்பத்தினரின் வீட்டில் இருந்தார்.
இஸ்லாமிய சமயப்படி, சமயத் தலைவரான 'காதி' திருமணத்தை நடத்த, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 'நிக்காஹ்' வைபவம் நடைபெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு பாரிக்கிற்கு அப்பெண் நிச்சயிக்கப்பட்டிருந்தார்.
தமது தாய்வழி சொந்தமான லவ்லி அக்தர் என்ற பெண்ணை, பாரிக் சிங்கப்பூரில் இருந்தபோதே நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஊர் அறிய, சுற்றமும் நட்பும் சூழ பாரிக், லவ்லி திருமணம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்பு உலகத்தையே உலுக்கி வரும் கொவிட்-19 கிருமிப் பரவல் தம்மைப் பெருமளவில் பாதிக்கும் என்று பாரிக் எதிர்பார்க்கவில்லை.
விமானச் சேவை நிறுத்தம் மனதளவில் அவருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. எப்படியாவது சொந்த நாட்டுக்குத் திரும்பி விடலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
ஆனால் சிங்கப்பூருக்கு மீண்டும் வர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவரை வாட்டியது.
அந்தக் கவலை அவருக்கு
மிகுதியாக இருந்ததற்கு அவரது உடன்பிறப்பே காரணம்.
தமது மூத்த சகோதரர் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறைக்காக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் பங்ளாதேஷ் திரும்பினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் அவரால் மீண்டும் சிங்கப்பூருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வேலையை இழந்தார்.
"திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. பெண் வீட்டார் நீண்ட காலம் எனக்காகக் காத்திருக்கமாட்டார்கள்.
"ஆனால் என்னால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. நான் அங்கு சென்றுவிட்டால் மீண்டும் சிங்கப்பூர் வருவது கடினம். இதனால் என் குடும்பத்திற்கு வருமானம் இல்லாமல் போய்விடக்
கூடும்," என்று தமது பெற்றோரின் ஐந்து மகன்களில் மூன்றாவது மகனான பாரிக் அப்துல் சொன்னார்.
பாரிக் அப்துலும் அவரது இளைய சகோதரரும் வேலை பார்த்து குடும்பச் செலவைச்
சமாளிக்கின்றனர்.
பெற்றோர், அண்ணன்கள், அண்ணிமார்கள், அண்ணன்களின் பிள்ளைகள், இளைய சகோதரர்கள் என அனைவரும் இவர்களின் வருமானத்தை நம்பி இருக்கின்றனர்.
குடும்பச் செலவுக்காக பாரிக் மாதாமாதம் $400 அனுப்புகிறார்.
இருவீட்டார் ஊக்குவித்ததைத் தொடர்ந்து, மெய்நிகர் தளத்தில் மணமுடித்த பாரிக், தமது மகிழ்ச்சி யை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
தமது தங்குவிடுதியில் தங்கியிருக்கும் 20 நண்பர்களுக்கு அங்கேயே சமைத்து உணவளித்தார்.
பங்ளாதேஷில் அவரது பெற்றோர் ஏறத்தாழ 50 பேருக்கு உணவளித்து மகிழ்ச்சியடைந்தனர்.
விரைவில் சொந்த நாடு திரும்ப பாரிக் அப்துல் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.