ப. பாலசுப்பிரமணியம்
"கையில் பணம் இல்லாத நேரங்களில், முதலில் எங்கள் பிள்ளை களுக்கு உணவு கொடுப்போம். பின்னர் எங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ள தண்ணீர் குடிப்போம்."
'பியோண்ட் சோஷியல் சர்விசஸ்' சமூக சேவைகள் அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தங்கள் பிள்ளைகளுக்கு உணவு இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் உணவைக் குறைத்துக் கொள்கின்றனர் என்பது அந்த ஆய்வின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று.
குழந்தை, இளையர் நல்வாழ்வு அமைப்பான 'பியோண்ட்', கடந்தாண்டு வாடகை வீடுகள் அதிகம் உள்ள குடியிருப்புப் பேட்டையில் உணவு போதாத நிலை குறித்து 50க்கும் மேற்பட்ட வாடகை வீடு குடியிருப்பாளர்கள், உணவு உதவி வழங்குபவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆய்வு நடத்தியது.
கொவிட்-19 கிருமித்தொற்று குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உணவு போதாத நிலை அதிகரித்துள்ளதாக பியோண்ட் அமைப்பின் ஆய்வு கண்டறிந்தது.
இது பணம் இல்லாததால், தரமான உணவு, பல்வகை உணவு, ஊட்டச்சத்துள்ள உணவு போன்றவை போதுமான அளவுக்கு கிடைக்காத நிலையாகும்.
இது ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினை என்று பியோண்ட் வர்ணித்தது.
அடுத்த வேளை உணவு நிச்சயமில்லை என்ற நிலைக்கும் மன உளைச்சல், நாட்பட்ட நோய் ஆகியவற்றுடன் தொடர்பிருப்பதாக அந்த ஆய்வு கூறியது.
குறைவாக உள்ள உணவை ஈடுகட்ட, தண்ணீர், மாவுச்சத்து உள்ள உணவு போன்றவற்றை உட்கொண்டதுடன் விலை மலிவான, ஆனால் வயிற்றை நிரப்பும் உணவு வகைகளைக் குடும்பங்கள் தேர்ந்தெடுத்தன.
'பியோண்ட்' அமைப்பு ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முன்பு, அதன் குடும்ப உதவி நிதிக்கு விண்ணப்பித்தவர்களின் இடைநிலை (median) குடும்ப வருமானம் $1,600 ஆக இருந்ததாகக் கூறியது.
ஆனால் கிருமிப் பரவலுக்குப் பின்னர், உதவி நிதிக்கு விண்ணப்பித்தவர்களின் குடும்ப வருமானம் $500க்கு குறைந்தது.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் 54 வயது திருமதி பிரியா, (உண்மைப் பெயர் அல்ல). கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பு இவர் பகுதி நேரமாக வீடுகளைச் சுத்தம் செய்து வந்தார்.
கணவருடனும் தொடக்கப்பள்ளி செல்லும் பேரப்பிள்ளையுடனும் அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் கிருமிப் பரவலால் திருமதி பிரியா தமது வேலையை இழந்தார். உடல்நலப் பிரச்சினையால் அவரது கணவராலும் வேலை செய்ய இயலாது.
இந்நிலையில் சமூக மேம்பாட்டு மன்றம் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி வருகிறது.
"பணப் பற்றாக்குறை ஏற்படும்போது அருகில் இருக்கும் பெளத்த ஆலயத்திலிருந்து இலவச உணவை பெற்றுக்கொள்வோம். வீட்டில் சமைக்கும் கறி வகை உணவு இரு நாட்கள் வரை வைத்து உண்போம்," என்று கூறினார் திருமதி பிரியா.
இவ்வாண்டு ஏழு வயதாகும் தமது பேரப்பிள்ளையின் மூன்று வேளைக்கான சாப்பாட்டுத் தேவையும் பூர்த்திசெய்யப்படுவதாக திருமதி பிரியா குறிப்பிட்டார்.
அவ்வப்போது உதவி அமைப்பு கள் நேரடியாக வந்து வழங்கும் இலவச உணவு அல்லது மளிகைப் பொருள் அன்பளிப்பு உதவி குடும்பத்திற்கு பேருதவியாக விளங்கு வதாகவும் அவர் சொன்னார்.
போதிய சேமிப்பு இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கிருமிப் பரவல் தமக்கு உணர்த்தியது என்று கூறிய திருமதி பிரியா, பேரப்பிள்ளையைத் தங்களால் முடிந்த பரமாரிப்பை வழங்க உறுதி கொண்டுள்ளதாகச் சொன்னார்.
உணவு போதாத நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வசதி குறைந்த குடும்பங்களின் உணவு மற்றும் இதர அடிப்படைத் தேவை களுக்கு உதவ, 'பியோண்ட் சமூகச் சேவை அமைப்பு அண்மையில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளது. ஜியாக் பா புவே (Jiak Ba Buay) என்பது திட்டத்தின் பெயர். ஹோக்கியன் கிளைமொழியில் சாப்பிட்டு விட்டீர்களா என்பது அதன் பொருள்.
இம்முயற்சி குறித்து மேல் விவரம் அறியவும், நன்கொடை வழங்கவும் https://www.beyond.org.sg/jiakbabuay/ என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.