ப. பாலசுப்பிரமணியம்
இனவாதம் தொடர்பான அனுபவங்கள் ஃபஹீமாவுக்கு ஏற்பட்டதுண்டு. அச்சம்பவங்கள் நடக்கும்போது அந்தத் தருணத்தில் நற்குடிமக்களாக என்ன செய்வதென்று பல நாட்கள் அவர் யோசித்திருக்கிறார்.
சிங்கப்பூரர்களுக்கிடையே கலாசார அறிவு, புரிந்துணர்வு இரண்டையும் வளர்ப்பதே சிறந்த வழி என்று 36 வயது நஸ்ஹத் ஃபஹீமா நஸீர் கான் முடிவெடுத்தார். அதற்காக 2015ஆம் ஆண்டில், 'ஹேஷ்.பீஸ்' (hash.peace) அமைப்பைத் தோற்றுவித்தார். சமூக நல்லிணக்க ஆதரவு வழங்கும் இந்த அமைப்பை, இளையர்களே வழிநடத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பின் வழி வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றி புரிந்துகொள்ள உதவும் ஒன்றுகூடல்கள், சிங்கப்பூரின் நல்லிணக்கத்தைக் குலைக்கும் விவகாரங்களைப் பற்றிய கலந்துரையாடல்கள் மூலம் மற்ற இனத்தவர்களின் கருத்துகளை இளையர்கள் செவிமடுத்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
சமயம் சார்ந்த பயங்கரவாத சித்தாந்தம் பரவுவதைத் தடுக்கவும் அமைப்பு உதவுகிறது.
"ஒருவருக்கொருவர் இடையிலான கலாசாரப் புரிந்துணர்வை மேலும் மேம்படச் செய்யலாம். பல இன, பல கலாசார, பல நாட்டவர் உள்ள வேலையிடத்தில் சமூக நல்லிணக்கம் வலுவாக்கப்படுவது குறித்து நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு சிந்திக்கலாம்.
"வெவ்வேறு கலாசாரத்தைப் பற்றி மேலும் ஆராய அரும்பொருளகம் செல்வது அல்லது இன நல்லிணக்க நாளை அலுவலகத்தில் கொண்டாடுவதைப் பரிசீலிக்கலாம்," என்றார் ஃபஹீமா.
இவர் சில ஆண்டுகளாக அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றில் நிர்வாகியாக இருந்து, தற்போது எஸ். ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியில் ஆசியா தொடர்பான முதுகலைப் பட்டப்படிப்பை முழுநேரமாக மேற்கொண்டு வருகிறார்.
சமூக நலப் பணியில் ஈடுபடும் ஜமியா சிங்கப்பூர் அமைப்பின் இளையர் பிரிவுக்கு 2018ஆம் ஆண்டு முதல் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
அங்கு 'சிங்கப்பூர் ஃபூட்பேங்க்' அமைப்புடன் இணைந்து 900க்கும் மேற்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் முயற்சி உட்பட பல்வேறு சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஜமியா அமைப்பின் இளையர் பிரிவினரிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்க்க, வாய்ப்புகள் ஏற்படுத்தும் நோக்கில் ஆசியான் அளவில் ஒரு மெய்நிகர் மாநாட்டுக்கு இவ்வாண்டு ஏற்பாடு செய்திருந்தார். வட்டார அளவில் செயல்படும் மற்ற இளைய தலைவர்களிடமிருந்து சமூகத்திற்குப் பங்காற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள மாநாடு வழிவகுத்தது.
"உலகத்தை மாற்றப் போகிறேன் என அனைத்து விவகாரங்களையும் இளையர்கள் தங்கள் தலையில் சுமந்து, அந்தப் பளுவால் சோர்வடைந்து, தொண்டூழியத்தை விட்டு விலகும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இளையர்கள் பரிந்துரை செய்யும் சமூக நடவடிக்கைகளில், அவர்களுக்கு முதலில் ஆர்வம் இருக்கவேண்டும். தாங்கள் விரும்பி அதில் ஈடுபடுவதாக இருக்க வேண்டும் என எப்போதும் வலியுறுத்துவேன்," என்று சொன்னார் ஃபஹீமா.
ஒரு தொண்டூழிய அமைப்பின் நீடித்த நிலைத்தன்மைக்கு, அவ்வப்போது தலைமைத்துவ மாற்றம் அவசியம் என்று கருதும் ஃபஹீமா, தாம் சேவையாற்றும் இரு தொண்டூழிய அமைப்புகளிலும் தகுந்த இளம் தலைவர்களை அடையாளம் கண்டு, தலைமைத்துவப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
தொடர்ந்து அந்த இரு அமைப்பு களிலும் இதர வழிகளில் பங்காற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பப் பொறுப்புகளையும் முழுநேரப் பணியையும் சமாளித்தவாறு சமூகத்திற்குத் தொண்டாற்றி வரும் இவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மதிப்புக்குரிய 'அதிபர் தொண்டூழிய, கொடை விருது' இம்மாதம் 11ஆம் தேதியன்று இவருக்கு வழங்கப்பட்டது.
"ஃபஹீமா உட்பட, 11 பேருக்கு இவ்வாண்டு இந்த விருது வழங்கிச் சிறப்பிக்கிப்பட்டது. மீள்திறன் மிக்க நகரில் மற்றவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவியை எல்லாராலும் நல்க முடியும் என்பதை இவ்விருது உணர்த்துகிறது," என்று தேசிய தொண்டூழிய, நன்கொடை ஊக்குவிப்பு நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெலிசா கிவி தெரிவித்தார்.