சீ. ஜமிலா அக்பர்
ஆரம்பகாலக் கல்வித் துறையில் 1998ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தவர் திருவாட்டி கன்னிகாதேவி நாராயணசாமி, 59. இப்போது திறன் ஆதரவு மையத்தின் உதவி இயக்குநராகவும் பிரஸ்பிடேரியன் சமூக சேவை மையத்தின் சிறப்புத் தேவைப் பிரிவின் வழிகாட்டியாகவும் பணியாற்றி வருகிறார்.
பல ஆண்டுகளாக இவர் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு உதவிவருகிறார். சிங்கப்பூரையும் தாண்டி மற்ற சில நாடுகளில் ஆரம்பகாலக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்பதை இவர் உணர்ந்தார். சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்துடன் தொண்டாற்றி இந்நாடுகளில் ஆரம்பகாலக் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்.
அண்மையில் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் 30வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது முன்மாதிரியாகத் திகழும் தொண்டூழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திருவாட்டி கன்னிகாதேவிக்கு 'குடிமகன் தூதர்' விருது வழங்கப்பட்டது.
தம் குடும்பத்தின் ஆதரவும் சக தொண்டூழியர்களின் ஒத்துழைப்பும் இல்லையெனில் தமது தொண்டூழியப் பணி சாத்தியமில்லை என்றார் அவர்.
"இந்தியாவின் சில பகுதிகளில், தொடக்கநிலை ஒன்றுதான் ஆரம்பகாலக் கல்வி என்று பெற்றோர்கள் நினைத்திருந்தனர். இவர்களுக்கு ஆரம்பகாலக் கல்வியின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்த்தினோம். வெவ்வேறு கல்வி நிலையங்களுக்கு சிங்கப்பூரின் ஆரம்பகாலக் கல்விமுறையைப் பற்றி பகிர்ந்துகொண்டோம். சில கல்வி நிலையங்களில் இதனால் மாற்றம் ஏற்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என்று திருவாட்டி கன்னிகாதேவி தெரிவித்தார்.
தொண்டூழியத்தில் ஆர்வம் காட்டும் மற்றொருவர் 62 வயது உடல்நோவு தணிப்பு பராமரிப்பாளர் ராமசுவாமி அகிலேஸ்வரன். இவர் தமது 12 ஆண்டு தொண்டூழியச் சேவையின் மூலம் இந்தோனீசியாவில் நோய்த்தடுப்பு சிகிச்சைத் தரத்தை உயர்த்தி 60,000த்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார்.
தமது முப்பது ஆண்டு கால அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் இந்தோனீசிய மருத்துவர்கள், தாதியர்கள் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டு அவர்களின் திறன்கள் மேம்பட முக்கியக் காரணமாக இருந்துள்ளார் இவர்.
சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் பல தொண்டூழியத் திட்டங்களுக்குத் தலைமை தாங்கி, சிறப்பாகச் செயலாற்றி வரும் திரு ராமசுவாமி அகிலேஸ்வரனுக்கு 'உலகக் குடிமகன்' விருது வழங்கப்பட்டது.