உலக வரைபடத் தொகுப்புகளிலிருந்து வெவ்வேறு வடிவங்கள், அளவுகள், நிறங்களிலான வரைபடங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு முதன்முறையாக சிங்கப்பூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
'உலகை வரைபடமாக்குதல்: ஆசிய வரைபடவியலிலிருந்து பெறப்படும் கண்ணோட்டங்கள்' என்ற இக்கண்காட்சி நேற்றுத் தொடங்கியது. அடுத்த ஆண்டு மே 8ஆம் தேதி வரை இது நடைபெறும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள அறிவியல் சார்ந்த நவீன யுக வரைபடங்கள், கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வரைபடங்களிலிருந்து மாறுபட்டவை. அக்கால வரைபடங்களில் கற்பனையும் உண்மையும் கலந்திருந்தன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வரைபடங்களை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். 60க்கும் மேற்பட்ட இந்தக் கலை, வரலாற்றுப் படைப்புகளைக் கண்காட்சியில் காணலாம்.
"அரசியல், அழகியல் அம்சங்களுடன் சமயம் சார்ந்த கூறுகளில் இருந்த ஆர்வம், வரைபடம் உருவாக்கத்தில் முக்கியத்துவம் பெற்றன. மேற்கத்திய தாக்கம் 17ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆசியர்களிடையே ஏற்படத் தொடங்கியபோது, சிக்கலான உலகம் விடுக்கும் மிரட்டலைத் தணிக்க இதுபோன்ற வரைபடங்கள் உதவின," என்றார் தேசிய நூலக வாரியத்தின் கண்காட்சிகள் பிரிவின் மூத்த தலைவர் திரு சுங் சாங் ஹோங். இந்திய மரபுடைமை நிலையம், ஆசிய நாகரிக அரும்பொருளகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அரிய வரைபடங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
சத்ருன்ஜய யாத்திரை வரைபடக் கண்ணோட்டம், பெனாரஸ் வரைபடம், ஜெயின் அண்டவியல் வரைபடம் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
"கீழை நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வரைபடங்கள் பற்றி ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள், எப்படி ஆசிய வரைபடங்களை மேம்படுத்தின அல்லது மாற்றி அமைத்தன என்பதை இந்த வரைபடங்கள் காட்டுகின்றன," என்று தேசிய நூலகத்தின் அரும்பொருளகப் பிரிவில் பணிபுரியும் மூத்த நூலகரான திருமதி மகேஸ்வரி பெரியசாமி தெரிவித்தார்.
வரைபடங்களில் வேற்று மொழிச் சொற்கள் இருந்ததால், அவற்றை மொழிபெயர்ப்பதற்காக பல நாடுகளைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் உதவி கோரி இந்த வரைபட ஆராய்ச்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்கள், கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள்.
"நாம் வாழும் உலகத்தையும் சுற்றியுள்ள வட்டாரத்தையும் நம் முன்னோர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதை இந்த வரைபடங்களின் மூலம் அறிந்திட முடிகிறது," என்று திருமதி மகேஸ்வரி விளக்கினார்.
முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரியத்தை மட்டும் காட்டாமல் அவர்களின் மொழி எவ்வாறு வேறுபட்டது என்பதையும் இந்த வரைபடங்கள் காட்டுகின்றன.
"பல இன சமுதாயமான சிங்கப்பூருக்கு, இந்தக் கண்காட்சியைக் கொண்டு வருவது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது," என்று நூலக வாரியத்துடன் இக்கண்காட்சித் திட்டத்திற்காக இணைந்து பணியாற்றிய இரு பிரெஞ்சு அரும்பொருளகப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
திரு பியர் சிங்காரவேலு, திரு ஃபேபரிஸ் ஆர்கௌன்ஸ் ஆகிய அவ்விருவரும் ஆசிய வரைபடங்களைக் கலைப் படைப்புகள் என வருணித்தும் இருந்தனர்.
விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் தேசிய நூலகக் கட்டடத்தின் பத்தாவது மாடி காட்சிக் கூடத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
கூடுதல் செய்தி:
பாவை சிவக்குமார்