அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்தை ஒட்டி சிங்கப்பூரில் நேற்று வெளிநாட்டு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டனர். கொண்டாட்டங்களுடன் காப்புறுதி உள்ளிட்ட பல நன்மைகளுக்கு வழிவகுக்கும் அவர்களுக்கான இணை உறுப்பினர் திட்டமும் தொடங்கப்பட்டது.
கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கான ஆதரவையும் மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ஊழியர் நிலையம், அவர்களுக்காக புதிதாக இணை உறுப்பினர் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசைச் சேர்ந்த இந்த நிலையம், இரு கட்டங்களாக இந்த இணை உறுப்பியத்தை வெளியிடும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிங்கப்பூர் அறிமுகத் திட்டம் (செட்டலிங்-இன் புரோகிராம்) திட்டத்தில் இணையும் புதிய ஊழியர்களுக்கு இந்த உறுப்பியம் முதலில் வழங்கப்படும்.
அடுத்த கட்டமாக, தற்போது இங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் 2022ஆம் ஆண்டு முதல் சேர்க்கப்படுவர்.
வேலையிடத்திற்கு வெளியில் ஏற்படும் விபத்துகள், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள் ஆகியவற்றுக்கான காப்புறுதி, இந்த உறுப்பியத்தின் முக்கியமான அங்கம். இவை தற்போது நடப்பில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டங்களில் இல்லை என்பதால் இந்தப் புதிய திட்டத்தை மேம்படுத்தப்பட்ட திட்டம் என்று என்டியுசி வர்ணித்தது.
இந்த உறுப்பியத்தின் ஆண்டுக் கட்டணம் $24. திட்டத்தில் சேர்வோருக்கு முதல் ஆண்டுக்கான கட்டணம் ஆறு வெள்ளியாகக் குறைக்கப்படும்.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இத்திட்டத்தில் 100,000 ஊழியர்களைச் சேர்க்க இலக்கு கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தலை வர் இயோ குவாட் குவாங் கூறினார்.
ஊழியர்களிடம் திரட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த உறுப்பியத் திட்டம், ஊழியர்கள் மீது தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கொண்டுள்ள கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்தார்.
மின்னிலக்கச் செயலி மூலம் ஊழியர்கள் இதன் சேவைகளைப் பெறலாம்.
"கற்றல், திறன் மேம்பாடு, தொலைபேசிச் சேவைகள், மருத்துவச் சேவைகள், வேலை முகப்புச் சேவைகள், வேலையிட விபத்துக்கான காப்புறுதி போன்றவற்றுக்கானச் சலுகைகளை ஊழியர்கள் இந்தச் செயலிமூலம் பெறுவர்," என்றும் திரு இங் கூறினார்.
எண் 51 சுன் லீ ரோட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் கேளிக்கை மன்றத்தில் நேற்று நிகழ்ந்த அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டங்களின்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு இங், இந்தக் காப்புறுதித் திட்டம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மிகக் கட்டுப்படியான திட்டம் என்றும் வேலையிடத்திற்கு வெளியிலுள்ள சூழலிலும் ஊழியர்களின் பாதுகாப்பை இத்திட்டம் உறுதி செய்யும் என்றும் கூறினார்.
"சிங்கப்பூர் ஊழியரணியின் ஓர் அங்கத்தினரான வெளிநாட்டு ஊழியர்கள், இங்கு வசிக்கும் காலம் பயனுள்ளதாக அமைவதற்கு இச்செயலி வகை செய்யும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளாகக் கட்டுமானத்துறையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் 30 வயது ஜான் பீட்டர் இந்தப் புதிய உறுப்பியத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
"இத்திட்டத்தில் அடங்கும் புதிய காப்புறுதித் திட்டம், முந்தைய திட்டங்களைவிட சிறந்தது என நான் கருதுகிறேன். வேலை இடத்திற்கு வெளியே நடக்கும் எதிர்பாராத விபத்து போன்ற அசம்பாவிதங்களுக்கு இத்திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது," என்று தஞ்சாவூரைச் சேர்ந்த திரு ஜான் கூறினார்.
"அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் நமது அன்புக்குரியவர்களுக்கு ஏற்படக் கூடிய பெரும் சிரமத்தைக் குறைக்க இந்தச் சிறு தொகை உதவலாம்," என்றார் செயலாக்க நிர்வாகியாகப் பணிபுரியும் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு அய்யப்பன், 41.
காப்புறுதியுடன் திறன் மேம்பாட்டுச் சலுகைகளைப் பெறுவது தமக்கு கூடுதல் ஊக்குவிப்பைத் தந்திருப்பதாக கட்டுமானத் துறைபாதுகாப்பு அதிகாரியான திரு சி. பாண்டியன், 46, கூறினார்.
ஊழியர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற விதமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அந்தக் கொண்டாட்டங்களில் ஊழியர்களுக்கு 3,000 அன்பளிப்புப் பைகள், 6,500 பேருக்கான உணவு, $30,000 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன.
என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி, $1.8 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கைச் சுத்திகரிப்பான், வைட்டமின் மாத்திரைகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேற்று 'டிஏஎஸ்எல்' எனப்படும் ஊழியர் தங்கும் விடுதிகளுக்கான சங்கத்திற்கு வழங்கியது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்களுடனான ஒருமைப்பாட்டைக் கொண்டாடுவதன் மூலம் ஃபேர்பிரைஸ், வெளிநாட்டு ஊழியர்களைப் பாராட்டும் சமுதாயத்துடன் இணைவதாக ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி சியா கியான் பெங் தெரிவித்தார். இந்த நன்கொடையின் மூலம் ஊழியர்களின் பாதுகாப்பும் நலனும் மேம்படும் என நம்புவதாக அவர் கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊழியர் நிலையம் மெய்நிகர் நிகழ்ச்சியுடன் கூடிய நேரடி கலை நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழக திரை நட்சத்திரங்கள் ரம்யா பாண்டியன், விமல், பாடகி உஜ்ஜைனி ராய் ஆகியோருடன் வங்காள பிரபலங்களும் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இரவு 7.30 மணி முதல் 9.30 மணிவரை காணலாம். கேளிக்கை அங்கங்கள் மட்டுமின்றி, அதிர்ஷ்டக் குலுக்கு, ஊழியர்களுடனான போட்டி அங்கம் மற்றும் நிலையத்தின் அடித்தளத் தூதர்களைக் கௌரவிக்கும் அங்கமும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை (IMD) கொண்டாட, மனிதவள அமைச்சின் கீழ் உள்ள 'ஏஸ்' எனப்படும் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழு, இருபதுக்கும் மேற்பட்ட பங்காளிகளுடன் இணைந்து, வெளிநாட்டு ஊழியர்களுக்கான அனைத்து எட்டு பொழுதுபோக்கு நிலையங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கொவிட் சூழலால் கடந்த ஈராண்டுகளாக விடுதிகளில் முடங்கிக் கிடந்த ஊழியர்கள் பலரும் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், சுற்றுலாக்கள் என பல்வேறு அங்கங்களிலும் பங்கேற்று நேற்றைய விடுமுறை நாளை உல்லாசமாகக் களித்தனர்.
டிசம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை இந்த நிலையங்களிலும் 500 ஊழியர் தங்குவிடுதி களிலும் 100,000 அன்பளிப்புப் பைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.