கி. ஜனார்த்தனன்
மருத்துவ அவசரநிலை ஏற்படும் நேரத்தில் சம்பவ இடங்களுக்கு விரைந்து உதவுவதில் பல்லாண்டு அனுபவம் கொண்ட அதிகாரி அப்துல் ரஹ்மான் அப்துல் ரசாக், 37, அடுத்த தலைமுறை சேவையாளர்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் மருத்துவ உதவி அதிகாரியாக கடந்த 19 ஆண்டு களாகச் சேவையாற்றிய திரு அப்துல் ரஹ்மான், குடிமைத் தற்காப்பின் 24ஆம் ரோட்டா தளபத்திய பயிற்சியில் டிசம்பர் 30ஆம் தேதி தேர்ச்சி பெற்ற அதிகாரிகளில் ஒருவர்.
தேசிய சேவையை முடித்த பின்னர் தமது 19 வயதில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் முழுநேரமாகச் சேர்ந்த திரு அப்துல் ரஹ்மான், ஆபத்தில் இருப்போருக்கு உதவுவதில் உற்சாகத்தையும் நிறைவையும் காண் பதாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"திறந்தவெளி கார் நிறுத்தம் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்த்தது எனது சேவை காலத்தில் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அபாயகட்டத்தைத் தாண்டிய பிறகு அனைவரும் உணர்ந்த நிம்மதியும் வெளிப்படுத்திய நன்றி உணர்வும் எனக்கு நிறைவாக இருந்தது," என்று அவர் கூறினார்.
பின்னர், இளைய அதிகாரிகளை வழிநடத்தும் பணிக்கு மாறிய திரு அப்துல் ரஹ்மான், அந்தப் பணிக்கு நேர்மையும் கட்டொழுங்கும் தேவைப்படுவதாகக் கருதுகிறார்.
"தற்போது பாடங்களை இணையத்தில் முன்கூட்டியே படிக்கும் வசதி உள்ளதால் எனது மாணவர்கள் முன்கூட்டியே படித்துவிட்டு கேள்விகளுடன் பயிற்சி வகுப்பு வருவர்.
"அந்த வகுப்பில் நான் மட்டும் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதற்குப் பதிலாக மாணவர்கள் அனைவரும் கலந்துரையாடும் சூழலை உருவாக்குவது வழக்கம்," என்று அவர் கூறினார்.
பணியில் இருந்துகொண்டே சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிதியியல் முடித்த திரு அப்துல் ரஹ்மான், இதற்காக தமது மனைவிக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார். படிப்பையும் சுழற்சி முறையிலான வேலை நேரத்தையும் சமாளிப்பது கடினம் என்றாலும் குடும்பம் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையின் ஆதரவு தமக்கு கைகொடுத்ததாகக் கூறினார்.
"நமது குடிமைத் தற்காப்புப் படை வருங்காலத்தில் மேன்
மேலும் சிறப்புப் பெறும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தொடர்ந்து என்னால் இயன்ற அளவு பங்காற்றுவதே என் விருப்பம்," என்றார் அவர்.