தமிழர்களின் தொன்மையான மரபு, பண்பாடு, நாகரிகத்தின் சங்கமமாக விளங்குகிறது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரமும் அங்குள்ள கடைகளும்! சிங்கப்பூர் இந்தியர்களின் வாழ்வியலில் பிணைந்துள்ள அவ்வட்டாரத்தில் செழுமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள எட்டுக் கடைகளை, அவை சமூகத்தில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை அங்கீகரித்துச் சிறப்பிக்கிறது தெருமுனை அரும்பொருளகத் திட்டம்.
கி.ஜனார்த்தனன்
கேம்பல் லேனில் அமைந்துள்ள ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடைக்குச் செல்பவர்கள், கடையுடன் தொடர்புடைய பொருள்களைக் காட்டும் அரும்பொருளகமாக விளங்கும் சிறிய வெண்ணிற காட்சிப்பெட்டி ஒன்று முகப்பில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம்.
1960களில் ஒட்டுக்கடையாக இருந்த ஜோதி ஸ்டோரின் வரலாற்றை விளக்கும் பனுவல்களும் பழைய படங்களும் நீல நிறப் பை, வாழை நார், வண்ணக் களிமண் தீபம், வளையல் போன்ற பொருள்களும் அச்சிறு அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிலும் சிங்கப்பூர் டைகர் ஸ்டாண்டர்டிலும் செய்தித்தாள் அச்சுக்கோப்பாளராகப் பணியாற்றிய திரு முருகையா ராமச்சந்திரா, 90, 1960ல் பூக்கடையைத் திறந்து, தம் மகளின் பெயரை அதற்குச் சூட்டினார். இந்தக் கடையைத் தொடங்கியபோது தமக்கு இரண்டு வயது என்று கூறிய திரு முருகையாவின் மகனும் கடையின் இப்போதைய நிர்வாகியுமான ராஜ்குமார் சந்திரா, 63, தங்களது கடையின் வளர்ச்சி, சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் வளர்ச்சியை எதிரொளிப்பதாகக் கூறினார்.
இக்கடையைப்போல, லிட்டில் இந்தியாவில் நெடுங்கால மரபுள்ள மேலும் ஏழு கடைகளிலும் காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய மரபுடைமைக் கழகத்தின் தெருமுனை அரும்பொருளகத் திட்டத்தின்கீழ் அந்தக் காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் 'அவர்எஸ்ஜி' மரபுடைமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மரபுடைமை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த தெருமுனை மரபுடைமை அரும்பொருளகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாக்களையும் பயிலரங்குகளையும் நடத்த வணிகங்களுக்கு 'அவர்எஸ்ஜி' மரபுடைமைத் திட்டம் உதவுகிறது. தேசிய மரபுடைமைக் கழகம் நடத்தும் சிங்கப்பூர் மரபுடைமை விழா போன்ற நிகழ்வுகளில் இக்கடைகள் பங்கேற்கவும் இத்திட்டம் உதவுகிறது.
மூவாண்டுச் சோதனைத் திட்டமாக, பாலஸ்டியர் வட்டாரத்தில் ஐந்து மரபுடைமை வர்த்தகங்களின் பங்களிப்புடன் 2020ஆம் ஆண்டு மார்ச்சில் இது தொடக்கம் கண்டது. பின்னர் ஏப்ரல் 2021ல் கம்போங் கிளாம் வட்டாரத்தில் ஏழு கடைகளில் காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டன.
அணிமணி பொற்சாலை, தண்டபாணி மளிகைக்கடை, எஸ்ஐஎஸ் இறைச்சிக்கடை, ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ், ஆனந்த பவன், கோமள விலாஸ், தி பனானா லீஃப் அப்போலோ ஆகியவை இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் மற்ற ஏழு கடைகள்.
'நகைத் தொழிலுக்கே கௌரவம்'
தமது கடைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தின் மூலம் சிங்கப்பூர் இந்தியர்களின் வாழ்வியலில் முக்கிய இடம் வகிக்கும் அணிகலன் செய்யும் கலையே கௌரவிக்கப்பட்டுள்ளதாக சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள அணிமணி பொற்சாலையின் உரிமையாளர்களில் ஒருவரான திரு பி.வி. அசோகன், 64, தெரிவித்தார்.
"1948ல் பட்டுக்கோட்டையில் இருந்து சிங்கப்பூர் வந்து, சிராங்கூன் சாலையில் இக்கடையைத் திறந்தார் பொற்கொல்லரான திரு ரத்தினவேலு, 2006ஆம் ஆண்டுவரை உரிமையாளராக இருந்தார். 2006ல் பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நிர்வகித்து வருகிறோம்," என்று திரு அசோகன் கூறினார்.
மூன்று தலைமுறைகளைக் கடந்து இயங்கிவரும் தண்டபாணி மளிகைக் கடைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் அந்தக் கடையை 1960களில் நிறுவிய திரு சண்முகத்தின் மருமகள் மீனா ஞானபண்டிதன், 45.
"உணவிற்குப் புகழ்பெற்ற காரைக்குடியிலிருந்து 1946ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த திரு சண்முகம், பாரம்பரிய மசாலா கலவைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர். அவர் அமைத்திருந்த கடையின் தோற்றம் முதல் மளிகைப்பொருள்களின் சுவைவரை சிறிதும் மாற்றாமல் பாதுகாத்து வருகிறோம்," என்றார் திருவாட்டி மீனா.
'தந்தையார் சிறப்பிப்பு'
பஃப்ளோ சாலையில் அமைந்துள்ள 'எஸ்ஐஎஸ் பிரிமியம் மீட்ஸ்' இறைச்சிக்கடையின் உரிமையாளர் ஜாய்ஸ் கிங்ஸ்லி, இந்த அங்கீகாரம் தம் தந்தை சின்னசாமி இருதயசாமியைப் பெருமைப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
"1949ஆம் ஆண்டில் என் தந்தை தமது 14 வயதில் சிங்கப்பூருக்குக் கப்பலில் வந்தார். இறைச்சிக்கடை யில் வேலைக்குச் சேர்ந்து, அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு, பின்னர் தேக்கா சந்தையில் தனியாகக் கடை திறந்தார்," என்று திருவாட்டி கிங்ஸ்லி கூறினார்.
"முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடையின் வளர்ச்சியை நான் கண்டுள்ளதால் லிட்டில் இந்தியா வரலாற்றுடன் எங்களது கடைக்கு உள்ள பிணைப்பை என்னால் நன்கு உணர முடிகிறது," என்று அவர் சொன்னார்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்துக்களும் முஸ்லிம்களுமாக இருப்பதால் அவர்களது சமய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மாட்டிறைச்சியையும் பன்றி இறைச்சியையும் இக்கடை விற்பதில்லை.
தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்துவதில் முன்னோடி
சிங்கப்பூரின் ஆகப் பழமையான இந்திய உணவகங்களில் ஒன்றான ஆனந்த பவன், புதிய தொழில்நுட்ப முறைகளைக் கையாள்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது. கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலில் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க இயந்திர மனிதர்களைப் பயன்படுத்திய ஆனந்தபவன், பாரம்பரிய சேவைத் தரத்தைத் தொடர்ந்து வழங்க புதுப்புது தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்த எப்போதும் விரும்பும் என்றார் அதன் உரிமையாளர் திரு வீரன்குமார் எட்டிக்கன், 38.
1924ஆம் ஆண்டில் திரு குழந்தைவேலு முத்துசாமி கவுண்டர், தம் சகோதரர்களுடன் ஆனந்த பவன் உணவகத்தைத் தொடங்கினார். தற்போது ஐந்து கிளைகளுடன் இயங்கி வரும் அவ்வுணவகத்தின் மரபுடைமைக் காட்சிப் பெட்டி சிராங்கூன் சாலையிலுள்ள அதன் கிளைக்கு அருகில் இருக்கும் சுவரை ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது.
1947ல் தொடங்கப்பட்ட கோமள விலாஸ், பாரம்பரிய உணவுகளுடன் சிங்கப்பூர்த் தமிழர்களின் உணவுத் தெரிவுகளில் பல்வேறு புதுமைகளையும் அறிமுகம் செய்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 'கருணா விலாஸ்' என்ற உணவகத்தின் உரிமையாளர் இந்தியாவுக்குத் திரும்பியதை அடுத்து, அதனை வாங்கி அதற்குத் தம் மனைவியின் பெயரைச் சூட்டினார் திரு முருகையா.
தி பனானா லீஃப் அப்போலோ உணவகத்தை 1974ல் நிறுவிய சமையற்கலைஞர் எஸ். செல்லப்பன், 1960ல் காரைக்குடியிலிருந்து சிங்கப்பூர் வந்து, பழம்பெரும் வர்த்தகர் கோவிந்தசாமி பிள்ளைக்கு சமையற்காரராகப் பணியாற்றினார். பின்பு அவர் சிறிய தோசைக் கடை ஒன்று நடத்தி, அதற்குப் பிறகு கஃப் ரோட்டில் உணவகம் ஒன்றை தொடங்கினார். 1983ஆம் ஆண்டில் ரேஸ் கோர்ஸ் சாலைக்கு அக்கடை இடம்பெயர்ந்தது.
"கடின உழைப்பாளியும் கட்டொழுங்கு மிக்கவருமான என் தந்தை, குறையாத தரமே பாரம்பரியத்தின் பெருமை என நம்பியவர்," என்றார் அவரின் இரண்டாவது பிள்ளையான திரு சங்கரநாதன்.
கேம்பல் லேனில் 1957ஆம் ஆண்டு திரு கே. முகம்மது ஹனிஃபா சிறிய அளவில் தொடங்கிய தெருவோர துணிக்கடை, இன்று மலேசியாவிலும் இந்தியாவிலும் கிளைகளைக் கொண்டு பெரும் வணிகமாக விரிவடைந்து உள்ளது. அத்துடன், வீட்டிற்குத் தேவையான பொருள்களையும் மளிகைப்பொருள்களையும் விற்கும் அக்கடையை இப்போது திரு ஹனிஃபாவின் பிள்ளைகள் நிர்வகித்து வருகின்றனர்.
சிராங்கூன் சாலையில் உள்ள ஹனிஃபா டெக்ஸ்டைல்சுக்குமுன் மரபுடைமைக் காட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.