எஸ்.விக்னேஸ்வரி
இந்திய மரபுடைமை நிலையத்தினுள் முதன்முறையாகக் காலடி எடுத்த வைத்தபோது திரு வைத்தியநாதனுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி, பெருமை!
கல்லும் மண்ணும் கம்பியுமாகக் கட்டுமானப் பணி நடந்தபோது, சாரக்கட்டுகளில் ஏறி இறங்கி, உடல் முழுதும் சிமென்ட் தூசி படிய பல மாதங்கள் கேம்பல் லேனில் வேலை பார்த்த அவர், கட்டடப் பணிகள் முடிந்த பின்னர் உள்ளே சென்று பார்த்ததில்லை.
"இது நான் கட்டிய கட்டடம். இங்கே இத்தனை காட்சிப்பொருள்களை வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று பெருமிதத்துடன் அவர் கூறினார்.
"சிங்கப்பூர் இந்தியர்கள் பற்றி நிறைய தகவல்களை இங்கே தெரிந்துகொண்டேன். இங்குள்ள தமிழர்களின் வரலாறு 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது," என்றார் அவர்.
சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் 45 வயதான திரு வைத்தியநாதன், இந்திய மரபுடைமை நிலையம், தேக்கா கடைத்தொகுதி, தி வெர்ஜ் போன்ற கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்கான மேலளாராக இருந்தார்.
ஆனால், இதுவரை அவர் அந்தக் கட்டங்களுக்குள் சென்று பார்த்ததில்லை.
இந்திய மரபுடைமை நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஏறக்குறைய எட்டாண்டுகளான நிலையில், முதன்முறையாக அந்நிலையத்தை சென்ற வாரம் அவர் சுற்றிப்பார்த்தார்.
இந்தியா, பங்ளாதேஷ், மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 45 ஊழியர்கள் பங்கேற்ற இந்தச் சுற்றுலாவை வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
அவர்களுக்கு நிலையத்தைச் சுற்றிக்காட்டிய தொண்டூழியர்கள், ஆங்கிலத்திலும் தமிழிலும் அங்குள்ள காட்சிப்பொருள்களைப் பற்றி விளக்கிக் கூறினர்.
சிங்கப்பூர் இந்தியர்களின் வரலாறு, கலாசாரம், மரபுடைமை போன்றவற்றை எடுத்துக்கூற முதன்முறையாக இச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் கூறியது.
"பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது விடுப்பு நாள்களில் விலங்கியல் தோட்டம், பறவைப் பூங்கா, மரினா பே போன்ற சுற்றுலாத் தலங்களுக்கே செல்வர்.
"ஆனால், மரபுடைமை நிலையங்கள், அரும்பொருளகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தையும் வரலாற்றையும் அவர்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
"தாங்கள் வாழும் சமூகத்தைப் பற்றி அவர்கள் அறிந்து வைத்து இருப்பது முக்கியம்," என்று வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் மூத்த அதிகாரி சதீஷ் நாயுடு குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் வரலாற்றுடன் தமிழ்நாட்டு வரலாற்றையும் அறிந்துகொள்ள இந்தச் சுற்றுலா உதவியதாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறினர்.
"இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் பற்றியும், இந்நாட்டில் அவர்களுடைய பங்களிப்பு பற்றியும் விளக்கமாகக் கூறினர். தமிழர்களின் மரபுடைமை இந்தியாவைவிட சிங்கப்பூரில் சிறப்பாகக் கட்டிக்காக்கப்படுவது குறிப்பிடத்தக்கது," என்றார் திரு சுகுமார், 45.
உலகெங்கும் கிருமித்தொற்றுச் சூழலால், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது குடும்பங்களை நேரில் சென்று பார்க்க முடியாத நிலை. அதனால் சிலருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது.
"என் நண்பர்களுடன் சுற்றுலாவிற்கு வந்ததில் மகிழ்ச்சி. என் நண்பர்கள், உறவினர்களை இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வருகைதர ஊக்குவிப்பேன்," என்று தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் திரு செந்தமிழ்ச்செல்வன், 25, கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில், இதுபோன்ற சுற்றுலாக்களை மற்ற மரபுடைமை நிலையங்களிலும் நடத்த வெளிநாட்டு ஊழியர் நிலையம் திட்டமிட்டுள்ளது.