அண்டை வீட்டுக்காரர் புகைபிடிப்பதைத் தாங்கமுடியாத அந்த ஆடவர் அதிருப்தியை வெளிப்படுத்த அந்த வீட்டுக்குள் சன்னல் வழியாக சிறிதளவு தண்ணீரைப் பீய்ச்சியடிப்பார். இவர் தண்ணீர் அடிப்பதால் அந்த அண்டைவீட்டுக்காரரும் வேண்டுமென்றே சன்னல் அருகே நின்று புகைபிடிப்பார்.
ஈராண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் பகை பெரிதான நிலையில், இருவரும் சமூக சமரசப் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர்.
தாம் புகைபிடித்ததால் தமது அண்டைவீட்டாருக்கு நெஞ்சில் கிருமித்தொற்று ஏற்பட்டது அப்போதுதான் அவருக்குத் தெரியவந்தது. இது முன்னரே தெரிந்து இருந்ததால் புகைபிடிப்பதை எப்போதோ நிறத்தியிருப்பேனே என்று அந்த அண்டைவீட்டுக்காரர் கூறினார்.
இந்தச் சம்பவத்தை கடந்தாண்டு செப்டம்பரில் நிகழ்ந்த சட்ட விழிப்புணர்வு வாரத்தின்போது பகிர்ந்த இரண்டாவது சட்ட அமைச்சர் எட்வின் டோங், சமூக சமரச நடுவர்களின் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதைச் சுட்டினார்.
2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, அண்டைவீட்டார் சத்தம் போடுவது குறித்த புகார்களின் எண்ணிக்கை 11,400 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்தாண்டு இதே காலத்திற்கு 3,600 ஆக இருந்தது.
கடந்தாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் அண்டை வீடுகளிலிருந்து புகை வெளிவருவது குறித்த புகார்கள் 25 விழுக்காடு அதிகரித்ததாக நகர சேவை அலுவலகம் தெரிவித்தது. சிகரெட் புகை, ஊதுவத்தி அல்லது குழம்பு வாசனை, அதிகமான சத்தம், இரைச்சல், நடைபாதையில் செடிகளை வைப்பது போன்றவை காலங்காலமாக அக்கம்பக்கத்தவரிடையே மனக்கசப்பு ஏற்படக் காரணமாக இருப்பவை.
கொவிட்-19 சூழலில் அண்டைவீட்டார் குறித்து வீடமைப்பு வளர்ச்சி கழகத்திற்கு கொடுக்கப்பட்ட புகார்கள் அதிகரித்துள்ளன.
இத்தகைய சிறிய சச்சரவுகளுக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்குப் பதிலாக சமசர நடுவரின் உதவியுடன் பிரச்சினையை ஆரோக்கியமான முறையில் தீர்க்கலாம் என்றார் திரு டோங்.
அண்டை வீட்டாருடன் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான சர்ச்சைகளுக்குப் பலர் பேசி தீர்வு காண இயலாதபோதும் பலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
நீதிமன்றத்திற்குப் பதிலாக சமரச நிலையத்தை நாடினால் சட்டச் சிக்கல்களின்றி அதிகச் செலவு இல்லாமல் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம்.
இதனால் நல்லுறவையும் வளர்க்கலாம் என்பது தமிழ் முரசிடம் பேசிய சமரச நடுவர்களின் பொதுவான பரிந்துரை.
கி. ஜனார்த்தனன்