சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்புத் துறையோடு இணைந்து ஏற்பாடு செய்த பகிர்வரங்கு பிப்ரவரி 25ல் நடைபெற்றது.
சிங்கப்பூரில் தமிழ் சோறு போடுமா? என்ற கேள்வி அவ்வப்போது நம் செவிகளில் ஒலிப்பதுதான். ஆனால், சோறு என்ன, அறுசுவை உணவே படைக்கும் அளவிற்கு வாய்ப்பு, வசதிகளைக் கொண்டது சிங்கப்பூர் தமிழ்.
அதன் அடிப்படையில், அத்தகைய வசதிகளை மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியில் அண்மையில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஈடுபட்டது.
சிங்கப்பூர் தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்புத் துறையோடு இணைந்து தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்காகப் பகிர்வரங்கு ஒன்றிற்கு அது ஏற்பாடு செய்தது.
அந்தத் துறையிலுள்ள உபகாரச் சம்பள வாய்ப்பை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது பகிர்வரங்கின் நோக்கம். உபகாரச் சம்பளம் குறித்த பகிர்வரங்கை அமைச்சோடு இணைந்து தமிழாசிரியர் சங்கம் நடத்தியது இதுவே முதல் முறை.
பகிர்வரங்கு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பிற்பகல் இணையம்வழி நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 40 மாண வர்கள் அதில் கலந்துகொண்டனர். அவர்களில் 15 பேர், ஜிசிஇ மேல்நிலைத் தேர்வை முடித்து மேற்படிப்பிற்காகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள்.
பகிர்வரங்கில் பங்கேற்ற தொடர்பு தகவல் அமைச்சின் இரண்டு கல்வி மான்கள் தங்களின் அனுபவங்
களையும் அமைச்சின் கல்வி உபகாரச் சம்பளத்தின் வாயிலாகப் பெற்ற பயன்களையும் பகிர்ந்துகொண்டனர். இவர்களில் ஒருவர் திரு ஜெரமயா. இவர் அமைச்சின் உபகாரச் சம்பளத்தைப் பெற்று இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைக் கல்வியை மேற்கொண்டு வருகிறார்.
இன்னொருவர் செல்வி அஸ்வினி செல்வராஜ். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடத்தில் முதுகலைக் கல்வி பயின்று வருகிறார் இவர்.
மொழி மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் அதேவேளை, அரசாங்கப் பணியையும் மேற்கொள்ள அமைச்சின் உபகாரச் சம்பளம் எவ்வாறு வழி
வகுத்தது என்பதை மாணவர்களிடம் கல்விமான்கள் எடுத்துரைத் தனர்.
அமைச்சின் அதிகாரிகள் மொழிபெயர்ப்புத் துறை, உபகாரச் சம்பளம், அமைச்சிலுள்ள பணிகள் ஆகியவை குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்தனர். அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் அமரவும் தமிழ் மொழியோடு தொடர்ந்து பயணம் செய்யவும் உபகாரச் சம்பளம் கைகொடுக்கும் விதத்தை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
மொழிபெயர்ப்புத் துறைக்குரிய உபகாரச் சம்பளத்திற்கான விண்ணப்பங்களை ஒவ்வோர் ஆண்டும் தொடர்பு, தகவல் அமைச்சு வரவேற்கிறது. இவ்வாண்டு விண்ணப்பத்திற்கான இறுதி நாள் மார்ச் 15. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களை https://go.gov.SG/MCIScholarship இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.