கவின்விழி கதிரொளி
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் போதிய உதவி இல்லாதது பெரும்பாலானவர்களின் அக்கறையாக உள்ளது.
வரவுசெலவுத் திட்டம் 2022 குறித்த இந்தியர் சமூகத்தின் கருத்தை அறிய, மக்கள் கழக இந்திய நற்பணிப் பேரவை ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கலந்துரையாடலில் பேசிய சமூகத் தலைவர்கள், குறைந்த வருவாய் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உதவித் திட்டங்களை வரவேற்றனர்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவ போதிய திட்டங்கள் இல்லை என்றனர்.
கட்டணங்களும் விலைவாசியும் பொருள் சேவை வரியும் அதிகரிப்பது நடுத்தர வர்க்கத்தினரைப் பாதிப்பதாக அவர்கள் கூறினர்.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைவிட, நடுத்தர வர்க்கத்தினருக்குச் சலுகைகள் குறைவாக இருந்தாலும், அவர்கள் செலுத்தும் வரியைவிட அதிகமான சலுகைகளைப் பெறுவதாக கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கிய சுகாதாரம், தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
அரசாங்க வளங்களை அதிகம் தேவையுள்ளோருக்குச் செலவிடுவதே பொதுவான வழிமுறை என்ற அவர், உதவி தேவைப்படும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசாங்கம் நிச்சயம் உதவும் என்றார்.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க சிங்கப்பூரின் திட்டங்கள், 'எஸ் பாஸ்', 'எம்ப்ளாய்மென்ட் பாஸு'க்கான சம்பள வரம்பு அதிகரிப்பு போன்றவை தலைவர்களின் மற்ற அக்கறைகளாக இருந்தன.
வருங்காலத்தில் பேரங்காடிகள் நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும். இது வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் என்ற கருத்து எழுப்பப்பட்டது.
கரியமில வாயு வெளியேற்றத்துக்கான வரி கூடுவதை நிறுவனங்கள் மக்கள் மீது மறைமுகமாக திணிக்கக்கூடும் என்றும் பயனீட்டுக் கட்டணங்கள் கூடுவது கவலைக்கிடமாக உள்ளது என்றும் சமூகத் தலைவர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் விதிப்பதால், நெகிழிப் பயன்பாடு குறையும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். கரிம வரி அதிகரிப்பும் தண்ணீர், மின்சாரக் கட்டண அதிகரிப்பும் மக்கள் இவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும். இவற்றின் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பசுமையான சிங்கப்பூரை உருவாக்குவது இத்திட்டங்களின் இலக்கு என்று விளக்கினார் டாக்டர் ஜனில் புதுச்சேரி.
'எஸ் பாஸ்', 'இ பாஸ்' அட்டை வைத்திருக்கும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை $500 கூட்டுவது குறித்த கேள்விக்கு, சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டம் இது என்றார் அமைச்சர்.
வெளிநாட்டு ஊழியர்களைக் குறைந்த சம்பளத்திற்கு வரவழைப்பது, அதிகமான சம்பளத்தை எதிர்பார்க்கும் சிங்கப்பூரர்களைப் பாதிக்கும். இத்திட்டத்தின் வாயிலாக சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றார் டாக்டர் ஜனில் புதுச்சேரி.
கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வரும் நாடாக தயார்படுத்திக்கொள்வதில் வரவுசெலவுத் திட்டம் 2022 கவனம் செலுத்தியுள்ளதாக, நற்பணிப் பேரவையின் ஆலோசகருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
"மக்களையும், வர்த்தகங்களையும், திறன், தொழில்நுட்பம் போன்ற அங்கங்களில் மேம்படுத்துவது எதிர்காலத்திற்கு இன்றியமையாததாகும். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து வெப்பநிலை உயர்வைக் குறைப்பதற்கும், தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கும் எந்தெந்த வழிகளில் செலவிடுகிறோம் என்பனவற்றில் வரவுசெலவுத் திட்டம் முக்கிய கவனம் செலுத்தியது," என்று அமைச்சர் ஜனில் கூறினார்.
இந்த செலவுகளுக்கான நிதியை பெறும் வழிகளையும் திட்டம் ஆராய்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூப்படையும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருவதால் சுகாதாரப் பராமரிப்புச் செலவும் கூடுகிறது என்றார் டாக்டர் ஜனில் புதுச்சேரி.
அனைவரும் நம் உடல்நலத்தில் ஆரம்பக்காலத்திலிருந்து அக்கறை கொள்ள வேண்டும். வரும் முன் காப்பதே பிற்காலத்தில் நமக்கு கைகொடுக்கும் என அவர் வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் மெய்நிகர் வழியாக நடந்த இந்தக் கலந்துரையாடலில் இந்திய சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள் என கிட்டத்தட்ட 150 பேர் பங்கேற்றனர். கலந்துரையாடல் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
வரவுசெலவுத் திட்ட அறிக்கை குறித்து தமிழ்ச் சமூகத்தினருடனான கலந்துரையாடலுக்கு தமிழர் பேரவை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
தமிழர் பேரவையின் இணை அமைப்புகளில் 20க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தமிழர் பேரவையின் ஆலோசகரும் புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முரளி பிள்ளையும் கலந்துரையாடலில் பங்கேற்று ஐயங்களுக்கு விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூரின் குடும்பங்கள், ஊழியர்கள், தொழில்கள், நீடித்த நிலைத்தன்மை, வருங்காலம் என ஐந்து பகுதிகளாக வரவுசெலவுத் திட்டத்தின் வெவ்வேறு அம்சங்கள் பகுத்து ஆராயப்பட்டன.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்கள், குறைந்த வருமான ஊழியர்களுக்கான உதவி, சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் ஆகியவை குறித்து அதிகம் பேசப்பட்டன.
இவ்வாண்டு வரவுசெலவுத்திட்டம், சிங்கப்பூரர்களின் விழுமியங்களைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதைப் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு முரளி பிள்ளை சுட்டிக்காட்டினார்.
இயற்கை வளங்கள் அற்ற சிங்கப்பூர், தொலைநோக்குடன் சிந்தித்து, சிக்கனமாக நடந்துகொள்ளவேண்டிய அவசியத்தை அவர் மீள்வலியுறுத்தினார்.
'ஒன்றிணைந்து முன்னோக்கிய நமது புதிய பாதையை உருவாக்குதல்' என்ற கருப்பொருளில் அமையப்பெற்றுள்ள இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட அறிக்கை, சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றியது. இயற்கை வளங்களின்றி, மனித ஆற்றலை மூலதனமாகக் கொண்டு முன்னேறிய சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறுவதற்கான பல முக்கியக் கூறுகளை வரவுசெலவுத் திட்டம் முன்வைத்துள்ளது.
அத்தகைய கூறுகளை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொள்வது முக்கியம் என்பதாலும், தேசிய அளவிலான இத்தகைய அம்சங்கள் குறித்த வெளிப்படையான, அறிவார்ந்த கலந்துரையாடல்கள் தமிழ்ச் சமூகத்தில் தொடரவேண்டும் என்பதாலும், இக்கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக, தமிழர் பேரவையின் தலைவர், திரு வெ பாண்டியன் கூறினார்.
மார்ச் 6ஆம் தேதி மெய்நிகர் தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ்ச் சமூகத்தின் தலைவர்கள் பலரும் தங்கள் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டது ஊக்கமளிப்பதாகவும், தமிழ்ச் சமூகத்திற்கு இத்தகைய மேலும் பல கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்ய திட்டம் இருப்பதாகவும் தமிழர் பேரவை தெரிவித்தது.
செய்தி, படம்: தமிழர் பேரவை