கி. ஜனார்த்தனன்
மொழியின் தோற்றத்திற்கு முன்னரே மொழிபெயர்ப்பு வந்துவிட்டது எனக் கூறிய பேச்சாளர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் (படம்), கூடியிருந்தோரை முதலில் வியப்பில் ஆழ்த்தினார்.
தாம் குறிப்பிடுவது வாய்மொழியைப் பற்றி அல்ல என்று விளக்கிய அவர், மனிதனின் ஆதிமொழியான உடல்மொழியைப் புரிந்துகொள்வது மொழிபெயர்ப்பின் முக்கிய அடித்தளம் என்ற மாறுபட்ட கருத்தை, தமிழ் மொழி விழாவை ஒட்டிய சொற்பொழிவு நிகழ்ச்சியில் முன்வைத்தார்.
தமிழ்மொழி விழா 2022ஐ முன்னிட்டு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவாட்டி ஜெயந்தஸ்ரீ , 'படைப்பிலக்கியமும் மொழிபெயர்ப்பும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
கடந்த வெள்ளிக்கிழமை 'ஸூம்' தளத்தில் நடந்தேறிய நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 110 பேர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் உடல் அசைவுகளையும் முக பாவனைகளையும் சரியாகப் புரிந்துகொள்ளும்போது, அவர்களது உணர்வுகளுடன் கலக்கும் வகையில் ஆசிரியர்களால் தமிழ் மொழியைக் கற்றுத்தர முடியுமென்றார் அவர்.
"மொழிபெயர்ப்பாளர்கள் இருவகைப்படுவர்; வரையறைகளையும் சட்டதிட்டங்களையும் மையப்படுத்தி மொழிபெயர்ப்பு செய்பவர்கள் ஒருவகை; படைப்புகளை உருவாக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றொரு வகை," என்று அவர் விவரித்தார்.
15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மொழி அறிஞர் ஜான் டிரைடன் விளக்கிய மூன்று வகை மொழிபெயர்ப்பு முறைகளையும் திருவாட்டி ஜெயந்தஸ்ரீ விளக்கினார்.
'மெட்டாஃபிரேஸ்' எனப்படும் வார்த்தைக்கு வார்த்தை என்ற முறையிலான மொழிபெயர்ப்பு, பெரும்பாலான நேரங்களில் பொருளைச் சிதைத்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
'பாராஃபிரேஸ்' முறையில், மூலமொழியில் எழுதப்பட்ட படைப்பின் பொருளைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு அதனைச் சிதைக்காமல் எழுதலாம் என்பதையும் மூலப்படைப்பு போன்ற மாதிரிப் படைப்பை உருவாக்கும் 'இமிட்டேஷன்' என்பது மூன்றாவது உத்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஒரு மொழி ஆசிரியரின் அடிப்படைத் தகுதியாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளின் ஆளுமை தேவைப்படுவதாகக் கூறிய அவர், அழுத்தமான, ஆழமான, வேரூன்றி நிற்கக்கூடிய ஆளுமை இல்லாத பட்சத்தில் மாணவர்களின் மதிப்பை ஆசிரியர்கள் பெற முடியாது என்றார்.
"ஆசிரியர்கள் தங்களது திறன்களை நாள்தோறும் மெருகுபடுத்துதல் அவசியம். ஆவலோடு மொழிக்கூறுகளைச் சலிப்பின்றி உள்வாங்கும் தன்மையை அவர்கள் கொண்டிருக்கவேண்டும்," என்று அவர் சொன்னார்.
மொழிபெயர்ப்பாளர்கள், படைப்பாளர்களைப் போலவே தங்களது காலத்தின் பிரதிநிதிகளாக இயங்க முடியும் என்று கூறிய திருவாட்டி ஜெயந்தஸ்ரீ, கிளியோபட்ரா போன்ற வரலாற்று மாந்தர்களைப் பற்றிய குறிப்புகளைப் புரிந்துகொண்டு படைப்புகளை உருவாக்கிய பிளூட்டார்க், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட் ஷா போன்றோர், அந்த வரலாற்று மாந்தரைத் தத்தம் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களாகச் சித்திரித்ததைச் சுட்டினார்.
இதேபோல வால்மீகிக்கு வெகு பிற்காலத்தில் வாழ்ந்த கம்பர், தம்மைச் சேர்ந்தவர்களுக்காக அவர்களுக்குத் தெரிந்த மொழி, கலாசார வடிவில் ராமாயணக் கருத்துகளைக் கொண்டுசேர்ப்பதாக அவர் விவரித்தார்.
மொழிபெயர்ப்பு மட்டுமின்றி மொழியின் மற்ற கூறுகளைப் பற்றிய தமது கருத்துகளையும் பகிர்ந்த திருவாட்டி ஜெயந்தஸ்ரீ, நாட்டின் பெயரைச் சுருக்காமல் இருப்பது தமிழுக்குச் செய்யப்படும் கடமைஎன்றார்.
தமிழகத்தில் சிங்காபுரமும் சிங்காநல்லூரும் சிங்கை என அழைக்கப்படுகின்றன. சிங்கப்பூரையும் சிங்கை என்று சுருக்கி அழைத்தால் அது சரியாக வராது எனக் கருதுகிறேன்," என்றார் அவர்.
தஞ்சாவூரைத் 'தஞ்சை' என்றும் புதுச்சேரியைப் 'புதுவை' என்றும் சுருக்குவதைத் தவிர்ப்பதாகக் கூறிய அவர், தமிழ் மொழியில் உள்ள இரண்டு மூன்று வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்லும் இன்பத்தை இழக்கத் தாம் தயாராக இல்லை என்றார்.
சொற்பொழிவுடன் புதிர் அங்கம் ஒன்றும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது. சிங்கப்பூரில் தமிழ்மொழி 1959ஆம் ஆண்டில் அதிகாரத்துவ மொழியானது, தமிழ்மொழி விழா 2007ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது உள்ளிட்ட தகவல்களை பங்கேற்பாளர்கள் 'காஹுட்' தளத்தின்மூலம் நடத்தப்பட்ட புதிர் அங்கத்தில் கற்றுக்கொண்டனர்.
தமிழவேள் கோ சாராங்கபாணியின் வாழ்க்கைக் கதைச் சுருக்கத்தையும் தமிழ் முரசு இதழை நிறுவியது, சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் தமிழை இடம்பெறச் செய்வதில் பங்காற்றியது உள்ளிட்ட அவரது சாதனைகளையும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் தமது தொடக்க உரையில் சுட்டினார்.
அதிகமான மாணவர்கள் ஆங்கிலத்தில் சிந்தித்துப் பேசும் சூழலுக்கேற்ற இந்தக் கருத்தரங்கு ஆசிரியர்களை மிகவும் கவரக்கூடிய ஒன்றாக அமைந்திருப்பதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிராங்கூன் கார்டன்ஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் குமாரி அ.அஸ்மது பீவி தெரிவித்தார்.
ஈசூன் இனோவா தொடக்கக் கல்லுரியின் மூத்த ஆசிரியர் திருவாட்டி அ. மல்லிகா, சூழலுக்கேற்ப மொழிபெயர்த்து பொருளை உள்வாங்கிச் செயல்படும் முறையை மாணவர்களிடம் பரிந்துரைக்கப்போவதாகக் கூறினார்.
பன்னிரெண்டு ஆண்டுகளாக சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ சாராங்கபாணி அவர்களின் நினைவுச் சொற்பொழிவை நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைசார் அறிஞர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றுவர்.