இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கமும் பரபரப்பான, நெருக்கடி மிகுந்த வாழ்க்கைச் சூழலும் போட்டி போட்டு நேரத்தைத் தின்றுகொண்டிருந்தாலும் நூல் வாசிப்பது, அதிலும் அச்சுப்படியை வாசிப்பது என்பது குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அது இன்னமும் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருப்பதற்குச் சான்றுகளாக விளங்கி வருகின்றன இங்குள்ள ஓரிரு புத்தகக் கடைகள்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ஆரியா கிரியேஷன்ஸ், ராஜி பதிப்பகம், தேக்கா 777 ஆகிய கடைகளில் தமிழ் நூல்கள் கிடைக்கின்றன.
நூல் விற்பனை மிகவும் குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து செயல்படுவதில் சிரமத்தை எதிர்கொண்ட ரஹ்மத் பதிப்பகத்தின் நூல்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியா கிரியேஷன்ஸ் தொடங்கப்பட்டது. டன்லப் சாலை முனையில் துணிகளுடன் நூல்களையும் விற்கும் சிறிய கடையாகத் தொடங்கப்பட்ட இக்கடை, தற்போது அப்பர் டிக்சன் சாலையில் ஈரடுக்குக் கடையாக, இரண்டாவது தளத்தில் ஒரு பெரிய புத்தகக் கடையுடன் செயல்படுகிறது.
"மின்னூல்களால் அச்சுநூல்களின் தேவை குறைந்துள்ளது. பெரும்பாலும் பெரியவர்களே கடைக்கு வருகின்றனர். கடையாக மட்டுமின்றி, உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் தளமாகவும் ஆரியா கிரியேஷன்ஸ் அமையும் என நம்புகிறோம்," என்றார் அதன் நிறுவனர் பிரேமா மகாலிங்கம்.
கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜி பதிப்பகத்தில் தேர்வு நூல்களே அதிக வரவேற்பு பெற்றுள்ளதாகவும், கொவிட்-19 சூழலில் பள்ளிகளுக்குச் சென்று நேரடியாகக் கடையை விளம்பரப்படுத்த இயலாமல் போனதால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் அதன் நிறுவனர் சூரிய ரத்னா.
தமிழ் நூல்களும் பூசைப் பொருள்களும் விற்கும் டன்லப் சாலையிலுள்ள 'தேக்கா 777' கடை, கடந்த ஆண்டு சிறிய அளவில் செயல்படத் தொடங்கி, தற்போது பெரிய கடையாக உருமாறியுள்ளது. வாசகர்களில் பலர் பக்தர்களாக இருப்பதைக் கண்டு புத்தகக்கடையாக இருந்த தேக்கா 777ல் பூசைப் பொருள்களையும் விற்கத் தொடங்கிய திரு வி. ரஞ்சித், 34, வாசகர்களின் ஆதரவால் ஊக்கம் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.
நோய்ப்பரவல் சூழலில் பாதிக்கப்பட்ட மற்றொரு நூல் விற்பனையகம், குமரேஷ் என்டர்பிரைசஸின் இணை நிறுவனமான 'தமிழ்புக்ஷாப்'. ஜெயக்குமார்-கமலவேணி இணையரால் 2002ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த ஆண்டிலிருந்து 'tamilbookshop.com' என முழுவதுமாக இணையத்திற்கு மாறியது.
"பல்லாண்டு காலமாய் இயங்கிய எங்களது நேரடிப் புத்தகக் கடையைவிட அண்மையில் தொடங்கப்பட்ட இணையக் கடைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சிறுவர் நூல்களை விற்கும் எங்களது கடை தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலிருக்கும் பெற்றோரையும் ஈர்த்துள்ளது," என்றார் திரு ஜெயக்குமார், 72.
மூலைக்கு மூலை நாளிதழ், வார, மாத சஞ்சிகைகளையும் நூல்களையும் விற்றுவந்த பல பெட்டிக் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றாலும் ஆங்காங்கே சில கடைகளில் தமிழ் நூல்கள், சஞ்சிகைகளைக் காண முடிகிறது.
நூல் வாசிப்போர் குறைந்திருக்கும் அதே சமயத்தில், பலர் மின்னூல்களையோ இலவசமாக நூலகத்தில் கிடைக்கக்கூடிய நூல்களையோ பெரும்பாலும் விரும்புகின்றனர் என்பது நூல் விற்பனையகங்களின் பொதுவான கருத்து. பிள்ளைகளின் படிப்பிற்கும் தமிழ்ப் புழக்கத்திற்கும் பெற்றோரே தமிழ் நூல்களை அதிகம் வாங்குவதால் சிறுவர் நூல்களில் அதிக நாட்டம் செலுத்துவதாக நூல் விற்பனையாளர்கள் கூறினர்.