கி. ஜனார்த்தனன்
கற்பித்தலின் மீதும் மாணவர்களின் முன்னேற்றத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்ததால் வேறு துறைகளிலிருந்து ஆசிரியர் தொழிலுக்கு மாறினர் அண்மையில் பதவி உயர்வு பெற்ற இந்த கல்வியாளர்கள்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் படிப்பை முடித்த பிறகு வங்கியில் வேலை பார்த்த திரு சத்ய பிரசாத், 45, அந்த வேலையைவிட ஆசிரியர் பணியே பிடித்திருந்ததாகத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக கிரீன்விட்ஜ் தொடக்கப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்த திரு பிரசாத், கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளியின் துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.
இவருடன் 5,454 கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கான பதவி உயர்வு விழா இம்மாதம் 28ஆம் தேதியன்று ரிசார்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் நடைபெற்றது.
பழைய வேலையை விட்டு விலகிய பின்னர், தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய திரு பிரசாத்திற்கு வேறொரு வேலை கிடைத்தபோதும் ஆசிரியர் துறையிலேயே இருக்க முடிவு செய்தார்.
பணம் அதிகம் சம்பாதிப்பதைக் காட்டிலும் மாணவர்களுடன் பழகும் வாய்ப்பே திரு பிரசாத்திற்குப் பிடித்திருக்கிறது.
"என் வழிகாட்டுதலின் மூலம் மாணவர்கள் தடைகளைத் தாண்டி முன்னேறுவதைக் காணும்போது நான் அடையும் மனநிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது," என்றார் திரு பிரசாத்.
2011ஆம் ஆண்டில் தமது பாட்டி மரணமடைந்த சமயத்தில் ரக்பீ போட்டிக்காக மாணவர்களை அழைத்தபோது அந்த மாணவர்கள் போட்டியில் எதிர்பாராத விதமாக வென்றதாக அவர் நினைவுகூர்ந்தார். அந்த நாளைத் தம்மால் மறக்க முடியாது என்று திரு பிரசாத் கூறினார்.
"என்னை மகிழ்விப்பதற்காக போராடி போட்டியில் வென்றதாக மாணவர்கள் கூறியபோது உணர்ச்சிவயப்பட்டேன். ஓர் ஓரமாக சென்று ஆனந்தக் கண்ணீர் விட்டேன்," என்றார் திரு பிரசாத்.
தொடக்கநிலையில் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களைக் கற்பித்த திரு பிரசாத், தொடக்கநிலை மாணவர்கள் நல்ல பண்புகளை நிரந்தரமாகக் கற்கும் வயதில் இருப்பதால் அவர்களுக்குக் கற்றுத்தர விரும்பினார். பணம் மீது பற்றின்மையும் மாணவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உண்மையான ஆர்வமும் ஆசிரியருக்குத் தேவை என்று ஐந்து வயது மகளுக்குத் தந்தையான திரு பிரசாத் கூறினார்.
பதவி உயர்வு பெற்ற மற்றொரு கல்வியாளரான அப்துல் நசீரும், 57, தொடக்கத்தில் வேறு துறையைச் சார்ந்தவர். காவல்துறையில் இருந்து இவர், 1995ஆம் ஆண்டு தமது ஆசிரியர் பட்டயக்கல்வியை முடித்த பின்னர் கிம் மோ உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகச் சேர்ந்தார். தமிழ்மொழிப் பாடம் இல்லாத உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி நிலையம் ஒன்றில் அவர் பாடம் கற்பித்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளித் தலைமையாசிரியரின் ஊக்குவிப்பின் பயனாக திருச்சியில் உள்ள தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்மொழியில் தமது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு 2001 முதல் 2003 வரை சிங்கப்பூருக்குத் திரும்பியபோது பாடத்திட்டப் பிரிவில் பாடப் புத்தக எழுத்தாளராகப் பணியாற்றினார். பாடத்திட்டத்தை வடிவமைக்கும் அனுபவம் பாடத்தை மாணவர்களுக்கு நடத்த மேலும் எளிதாக்கியதாகக் கூறினார். ஜின்டாய் உயர்நிலைப் பள்ளியிலும் மிலேனியா கல்வி நிலையத்திலும் கற்பித்த பின்னர் தற்போது சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப் பள்ளியில் வழிகாட்டு ஆசிரியராக உள்ளார்.
ஆசிரியர்களுக்கு சொல்வன்மை, அக்கறை, பாரபட்சமின்மை ஆகியவை முக்கியமாகத் தேவைப்படுகின்றன என்பது திரு நசீரின் உறுதியான நிலைப்பாடு,