ஐந்து வயது வரை சரிவரப் பேசாத மூத்த மகன் கேஷஃபின் நிலை தாயார் திருமதி சரஸ்வதிக்குக் கவலையளித்தது.
தொடக்கப்பள்ளியில் சேர்ந்த நிலையில் அவனுக்கு 'டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாடு கண்டறியப்பட்டது. இடிந்துபோன அவருக்கு, மேலுமோர் இடி! கிட்டத்தட்ட நான்கு ஆண்டு சிறியவனான இளைய மகன் யாதவிற்கு 'ஆட்டிசம்' எனும் மதியிறுக்கக் குறைபாடு கண்டறியப்பட்டது. இவருக்கு ருக்கேஷ் என்ற மகனும் உண்டு.
தற்போது முறையே 9, 6, 5 வயது பூர்த்தியான மூன்று மகன்களையும் முழுநேரமாகப் பராமரித்து வருகிறார் இந்த அன்புத் தாயார்.
பதினைந்து ஆண்டுகாலமாக பாலர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த திருமதி சரஸ்வதிக்கு, கடந்த ஆண்டு தாம் பணியில் இருந்து விலகவேண்டிய கட்டாயம் புலப்படத் தொடங்கியது. மூன்று சிறு பிள்ளைகளைப் பேணவும், கேஷஃப், யாதவின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும் தனது முழுநேர வேலையை இவர் கைவிட்டார்.
"இத்தனை ஆண்டுகாலமாக ஓடியோடி உழைத்த எனக்கு வேலைஇல்லாமல் இருந்தது பிடிமானம் இல்லாதது போன்றிருந்தது. இருப்பினும், மகன்களின் மகிழ்ச்சியைக் காண்பதும் அவர்களது நல்ல நெறிமுறைகளைக் கண்டு ஆசிரியர்கள் அவர்களைப் பாராட்டுவதைக் கேட்பதும் ஒரு தாயாக எனக்குச் சொல்லொணா மனநிறைவை அளிக்கின்றது," என்றார் 37 வயதான திருமதி சரஸ்வதி ஜீவானந்தம்.
யாதவை பாலர் பள்ளிக்கு மட்டுமின்றி, கைக்குழந்தைகள், சிறார்களிடம் உள்ள குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உதவும் திட்டத்தின்கீழான பாடங்களுக்கும் அழைத்துச்செல்ல வேண்டும். கேஷஃபை வாரம் மூன்றுமுறை 'டிஸ்லெக்சியா' நிலையத்தில் எழுத்தறிவுப் பாடத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும். இதற்கிடையில், இத்தகைய குறைபாடுகள் எதுவும் இல்லாத ருக்கேஷை சமமாகப் பராமரிக்கவில்லையே என்ற வருத்தமும் அவரை உறுத்தியது.
எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்குத் தானே அனைத்தையும் சரிவரச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பள்ளியில் கேஷஃபை சக மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிப்பதும், மனம் புண்படும்படி பேசுவதும் அவரை பாதித்தது. இதனால் மூன்று மகன்களையும் நல்ல நெறிமுறைகளுடன் வளர்ப்பதற்கு முன்னுரிமை தந்துவருகிறார்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் நல்ல ஆரம்பகால கற்றல் அனுபவத்தை வழங்க எண்ணி, தோழிகள் இருவருடன் இணைந்து 'த ஸ்குவிரல் ட்ரைப்' என்ற கல்விசார்ந்த வர்த்தக நிலையத்தையும் நிறுவியுள்ளார்.