முன்களப் பணியாளர்கள் கொவிட்-19 கிருமிப்பரவல் உலகைப் புரட்டிப் போட்டபோது அயராமல் பாடுபட்டு பல்லாயிரம் உயிர்களைக் காக்க உதவினார்கள். ஆனாலும் அவரவர் அன்னையர்க்கு அவர்கள் செல்லப்பிள்ளைகள் அல்லவா?
தாயினும் சாலப் பரிந்து நோயாளிகளைப் பராமரிக்கும் இவர்களுக்கும் அன்னை மடி தரும் ஆதரவு தேவாமிர்தம்.
தாயாரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர் இலங்கை நாட்டவரான 36 வயது இ.நிஷாந்த. அன்னையை நல்லபடி வைத்துக்கொள்வதற்காகவே சுகாதாகரத் துறை உதவியாளராகப் பணியாற்ற 16 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தார். ஜூரோங் சமூக மருத்துவமனையில் பணியாற்றும் இவர் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளால் ஈராண்டுக்குப் பிறகு, சென்ற ஏப்ரல் 8ஆம் தேதிதான் தாயாரை மீண்டும் காண முடிந்தது.
இவர் அன்னை, பாட்டி இருவரும் தாதியரே. பொறுமை, அரவணைப்பு, கவனம் போன்ற குணங்களைக் கொண்டிருந்த அவர்களது வழியிலேயே செல்ல விரும்பியதாகக் கூறினார் நிஷாந்த. சுகாதாரத் துறையில் தாம் வேலை செய்தால் தாயார் மகிழ்ச்சி அடைவார் எனத் தெரிந்தே அதனைத் தேர்ந்தெடுத்தார் நிஷாந்த.
கடந்த ஆண்டு பொதுத்துறை உருமாற்ற விருது போட்டியில் உன்னதச் சேவை விருதைப் பெற்ற திரு நிஷாந்த, இந்த வெற்றிக்குப் பின்னால் தமது தாயார் இருப்பதாகக் கூறி அவரை பெருமைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிங்களப் புத்தாண்டைத் தாயாருடன் கொண்டாட முடிந்தது இவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இவரைப் போன்றே அன்னை மடி நாடிச் சென்ற இன்னொரு பிள்ளை, அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் சிறுநீரக நிபுணராகப் பணியாற்றும் மருத்துவர் கே பிரியங்கா.
ஈராண்டுக்குப் பின்னர்தான் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தமது தாயாரைச் சென்று பார்த்தார் இவர். தொடக்கத்தில் இருந்து தாயார் தமக்கு அளித்த சுதந்திர உணர்வே அவர்மீதான ஏக்கத்தை அதிகரித்ததாகக் கூறினார் டாக்டர் பிரியங்கா. கொவிட்-19க்கு முன்னதாக ஆண்டுக்கு இருமுறையாவது தமது தாயாரைக் காணச் செல்வது இவருக்கு வழக்கம்.
இந்தியாவில் இவரது தந்தைக்கு கொவிட்-19 தொற்றியது. தடுப்பூசிகள் இல்லாத அந்நேரத்தில் உயிர்வாயுத் தட்டுப்பாடும் நிலவியதால் உறவினர் பலரும் உயிரிழந்தனர். அஞ்சிய தாயாருக்குத் தொலைபேசி மூலமாக மட்டுமே ஆறுதல் கூறமுடியும் என்ற நிலை கவலை அளித்தது என்றார் சிங்கப்பூரில் கணவர், 8 வயது மகன், 4 வயது மகளுடன் வாழும் டாக்டர் பிரியங்கா.
பிரச்சினைகளையும் பேரிடிகளையும் தாங்கி பிள்ளைகளுக்குத் தெரியாமல் புன்சிரிப்புடன் நடமாடும் தாயார்களைவிடப் பலசாலிகளை உலகில் காண்பது மிக அரிது என்றார் டாக்டர் பிரியங்கா.