அருணா கந்தசாமி
இளையர்களின் கலையார்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 'பரதம்' எனும் இந்திய நடனப் போட்டியை 2007ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது தோ பாயோ மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு.
'பரதம் 2022', இம்மாதம் 23ஆம் தேதி, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை, தோ பாயோ மேற்கு சமூக மன்ற அரங்கில் நடைபெற்றது. வயது அடிப்படையிலான மூன்று பிரிவுகளில் 50க்கும் மேற்பட்டோர் பதிந்துகொண்ட நிலையில் இம்மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற தகுதிச் சுற்றில் தேர்வான 18 போட்டியாளர்கள், இறுதிச் சுற்றில் களமிறங்கினர். விக்னேஸ்வரி வடிவழகன், நிர்மலா தேவி, கலைமணி பத்மலக்ஷ்மி சுரேஷ் ஆகியோர் போட்டியின் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
நிகழ்ச்சியில், நிதி மற்றும் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பரதக் கலை மீதான ஆர்வத்தை இளம் வயதிலேயே கண்டறிந்து ஊக்குவிப்பது முக்கியம் என்றார் தோ பாயோ மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவர் வி.ஜி. பாலசந்தர்.
போட்டியைப் பற்றி தன்னுடைய நடன ஆசிரியர் மூலம் அறிந்துகொண்ட 10 வயது ஸ்ரீதர் ப்ரணிதா,
இளம் வயதிலேயே நடனம் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் இவருக்கு இது முதல் போட்டி அல்ல. இருப்பினும் நடுவர்கள் முதல்முறையாகத் தன்னுடைய நாட்டியம் குறித்துக் கருத்துரைத்தது புதுமையான அனுபவம் என்றார், 'A' பிரிவில் முதல் பரிசை வென்ற ப்ரணிதா.
ஏழு வயதிலிருந்தே பரதம் பயிலும் இசபெல் ஜோஷி, 15, போட்டி குறித்து ஃபேஸ்புக் மூலம் தெரிந்துகொண்டதாகக் கூறினார். இவர் 'B' பிரிவில் முதல் பரிசைத் தட்டிச்சென்றார். செயிண்ட் மார்கரெட் உயர்நிலைப் பள்ளி மாணவியான இவர், மன உளைச்சலைக் குறைக்க நடனம் ஒரு சிறந்த வழி என்று கூறினார்.
படம்: ஏற்பாட்டுக் குழு