சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் தலைவர் நா. ஆண்டியப்பன் எழுதிய 'விண்ணில் வீடு கட்டி...' (அமீரகத்திற்கு ஓர் ஆனந்தப் பயணம்) எனும் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் 6ஆம் தேதி மாலை, உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் நடைபெற்றது.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகச் சார்புநிலைப் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையேற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரான இரா. தினகரன் நூலை வெளியிட்டார்.
திரு. தினகரன் தொலைஇயக்கி மூலம் ஒரு பொத்தானை அழுத்த, திரையில் தோன்றிய உலகின் ஆக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியிலிருந்து ஒரு பெட்டி மிதந்து வந்து தரை இறங்கி, பெட்டி திறந்து அதற்கு உள்ளிருந்து 'விண்ணில் வீடு கட்டி' புத்தகம் வெளிவருவது போன்று வித்தியாசமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளர் முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்க் கிளையின் தலைவர் முனைவர் மு. அ. காதர் வாழ்த்துரை வழங்கினார்.