மூவாண்டுகளுக்கு முன்பு மிகவும் துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார் திருவாட்டி நிஷா மெஹ்ராஜ். உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்த இவர் முழுநேர எழுத்தாளராக உருவெடுக்க வேலையை விட்டார்.
37 வயது திருவாட்டி நிஷாவிற்குக் கிடைத்தது வெகுமானம். இவர் எழுதிய 'வீ டு நாட் மேக் லவ்' நாவலின் பிரதி இவ்வாண்டுக்கான எப்பிகிராம் பதிப்பகத்தின் புனைவு விருதுக்கு முன்மொழியப்பட்டது.
சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு இந்தியர்களின் பார்வையில் அமைந்துள்ள குடும்பக் கதைதான் 'வீ டு நாட் மேக் லவ்'. அந்த நான்கு கதாபாத்திரங்களும் சராசரி சிங்கப்பூரர்கள்.
அச்சிடப்படாத ஆங்கில நாவல்களின் பிரதிகளுக்கு எப்பிகிராம் விருது வழங்கி வந்துள்ளது. இவ்வாண்டுக்கான எப்பிகிராம் விருதை வென்றவர் மலேசியாவின் கரீனா ரோபல்ஸ் பாஹ்ரின். அவருக்குப் பரிசுத் தொகையாக 25,000 வெள்ளி வழங்கப்பட்டது. விருதுக்கு முன்மொழியப்பட்ட திருவாட்டி நிஷா உட்பட இதர எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக 5,000 வெள்ளி வழங்கப்பட்டது.
பெற்றோருக்கு ஒரே பிள்ளையான திருவாட்டி நிஷா, பிடோக் ரெசர்வாயர் வட்டாரத்தில் இருக்கும் வீவக வீட்டில் வளர்ந்தார். இவரின் ஒற்றைத் தாயாரும் பாட்டியும் இவரை வளர்த்தனர்.
தாயார் தற்போது நிதி அமைச்சில் மூத்த சம்பளமுறை அதிகாரியாகப் பணிபுரிகிறார், பாட்டி உணவங்காடியில் 'மீ கோரெங்' கடைக்காரராக இருந்தவர்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் திருவாட்டி நிஷா திரைப்படங்கள் தொடர்பிலான பாடத் திட்டத்தில் கல்வி பயின்றார். அதற்குப் பிறகு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், படைப்பாக்க எழுத்து பாடத் திட்டத்தை மேற்கொண்டார்.
"கதை ஒன்றும் என்னிடம் இல்லை. அந்த நான்கு கதாபாத்திரங்களுக்கு நான் செவி சாய்த்தேன். நிலைமையைக் கருத்தில்கொள்ளாமல் அவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கினேன்," என்று இப்போது அச்சிடப்பட்டுள்ள தனது நாவல் உருவான விதத்தை விவரித்தார் திருவாட்டி நிஷா.