கால் முறிவு ஏற்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் இருந்தவாறு பீஷ்மர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார் உள்ளூர் பிரபலமான
திரு ச. வடிவழகன். இம்மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை எஸ்பிளனேட்டில் உள்ள சிங்டெல் வாட்டர்ஃபிரண்ட் அரங்கத்தில் அரங்கேறும் 'கிங்டம்ஸ் அபார்ட்' என்ற மகாபாரதத் தழுவல் நாடகத்தில் நடிக்கவிருக்கிறார் அவர். எதிர்பாரா வகையில் ஏற்பட்ட இந்தக் காயத்துடன் மேடையேறுவது இதுவே முதல் முறை என்றார் வடிவழகன்.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான பீஷ்மர், கம்பீரமும் வீரமும் நிறைந்த ஒரு போர்வீரர். அத்தகைய வீரரின் குணங்களை அமர்ந்தபடி காட்டுவதைச் சவாலாகக் குறிப்பிட்டார் வடிவழகன். உடல் பாவனைகள், வசனங்களைப் படைக்கும் முறை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத் தப்பட்டது. முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் மருத்துவமனையில் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, நாடகத்திலிருந்து விலகிவிடலாம் என எண்ணிய திரு வடிவழகனை நடிக்க உற்சாகப்படுத்தினார் நாடகத்தின் இயக்குநர் சொங் செ சியென். தேர் போல வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி, பீஷ்மர் கதாபாத்திரத்தை வேறுபட்ட கோணத்தில் நாடகக்குழுவினர் கற்பனை செய்து பார்த்துள்ளனர்.
"குருஷேத்திர போர்க் காட்சிகளில், எனது சக்கர நாற்காலி தேராகிறது. பிற இடங்களில், அது ஒரு நகரும் அரியணை போலாகிறது. இப்படி அமர்ந்தபடி நடிப்பதில் உள்ள பல்வேறு சவால்கள் என்னை ஒரு நடிகராக வளர்த்துள்ளன," என்றார் வடிவழகன்.
சக நடிகர்கள், மனைவி, ரவீந்திரன் நாடகக் குழு நண்பர்கள் என பலரின் ஆதரவுடன் இந்த அனுபவத்தை மேற்கொண்டுள்ளதாக கூறிய திரு வடிவழகன், நடக்கவோ எழுந்து சண்டையிடவோ முடியாதபோதிலும், பீஷ்மர் கதாபாத்திரம் தொய்வடையாது என நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மைய காலத்துக்கேற்ற நவீன மகாபாரத தழுவலாகப் படைக்கப்படும் 'கிங்டம்ஸ் அபார்ட்', வெளிநாட்டு நடிகர்களுடன், ஆங்கிலம் மட்டுமின்றி, பிறமொழி வசனங்களுடன் மேடையேறும். தமிழில் பேசும் பீஷ்மருடன், மலாயில் பேசும் பீமனையும், ஜப்பானிய மொழியில் பேசும் தர்மரையும் மக்கள் ரசிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு:
https://www.sistic.com.sg/events/kingdoms1122
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி