ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூர் உள்கட்டமைப்புகள் உருவாக பெரிதும் உதவி வரும் வெளிநாட்டு ஊழியர்களின் அல்லல்களைச் சித்திரிக்கும் ‘மை இன்விசிபல் லைஃப்’ எனும் உள்ளூர் திரைப்படம், ‘பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் தினத்தை’ முன்னிட்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதிவரை வரை யூடியூப் தளத்தில் இலவசமாக திரையிடப் படுகிறது
பள்ளிக்கூட வளாகத்தில் வேலை பார்க்கும் சஞ்சய் எனும் வெளிநாட்டு ஊழியருக்கும் மாணவரான டேனியலுக்கும் இடையே உள்ள நட்பை, உறவை இத்திரைப்படம் சித்திரிக்கிறது.
சிக்கல்களும் சந்தேகங்களும் ஏற்படுகையில் இருவருக்குமான நட்பு எவ்வகையில் பாதிக்கப்படுகிறது, சஞ்சய் எதிர்நோக்கும் சவால்கள் யாவை என்பதே படத்தின் கதைக்கரு.
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் 10-16 வயதுடைய இளையர்களுக்கும் உரியதாக உருவாகிஉள்ள இந்தப் படம், சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையையும் வெளிநாட்டு ஊழியர்களை மாணவர்கள் எந்த கண்ணோட்டத்தில் நோக்குகின்றனர் என்பதையும் ஆராய்கிறது.
சஞ்சய் கதாபாத்திரம், தங்களது வாழ்வியல் பிரச்சினைகள் அறியப்படுகின்றன என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊழியர்களிடையே ஏற்படுத்தும் என்று திரைப்படத்தின் இயக்குநர் திரு எட்வர்ட் ஃபூ நம்பிக்கை தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களின் சவால்களைச் சித்திரிக்கும் அதே வேளையில், பிள்ளை-பெற்றோர் உறவு, நட்பில் புரிந்துணர்வு என இளையர்களைச் சார்ந்த பல்வேறு கூறுகளையும் திரையில் கொண்டு வர முயற்சி செய்துள்ளதாக திரு எட்வர்ட் கூறினார்.
‘மை இன்விசிபல் லைஃப்’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நவம்பர் 23ஆம் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், ‘கேட்வே ஆர்ட்ஸ்’, ‘செண்டூரியன் கார்ப்பரேஷன்’ நிறுவனங்கள் இணைந்து எடுத்துள்ள இம்முயற்சியைப் பாராட்டினார்.
திரைப்படம் எனும் கலை ஊடகத்தைக் கொண்டு நமது சமூகத்தை, பண்பாட்டை ஆராய்வதோடு, இத்திரைப்படம் நாம் உருவாக்க விழையும் எதிர்காலத்தையும் எடுத்துக்கூறுவதாக டாக்டர் டான் கூறினார்.
“வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரும் சமூகத்தினரைப் பற்றிய நமது மனத்தடைகளைப் போக்குவது எப்படி என்பதை இத்திரைப்படம் காட்டுகிறது.
வெளிநாட்டு ஊழியர்களுடன் நல்லுறவு வளர்த்துக்கொள்வதற்கான முதல் படி, அவர்களுடன் உரையாடுவதே என்ற அமைச்சர், ஊழியர்களின் நலன் பேணும் பல்வகை முயற்சிகளை முன்னெடுத்துள்ள மனிதவள அமைச்சு, பள்ளிகளுடனும் இணைய முற்பட்டு, அதில் இளையர்களை ஈடுபடுத்தியுள்ளதையும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊழியர்கள் சார்ந்த தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட, பத்தில் எட்டு இளையர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த முயற்சி பற்றி கருத்து கூறிய கேட்வே ஆர்ட்ஸின் தலைமை நிர்வாகி ப்ரிசில்லா கொங், இம்முயற்சிக்கான எண்ணம், நோய்ப்பரவல் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையால் விளைந்தது என்றும் பின்னர், இம்முயற்சிக்கான எண்ணம் பிறந்ததாகவும் கூறினார். இத்திரைப்படத்தின் மின்னிலக்கப் பிரதியை பள்ளிகள் வாங்கலாம். அதோடு, பள்ளிகளின் பண்புநலன் கல்வித்திட்டத்துக்கான வழிகாட்டியும் வழங்கப்படும். மேல்விவரங்களுக்கு, grace@gateway.sg மின்னஞ்சலை நாடலாம்.