இளையோர், முதியோர், குடும்ப உறுப்பினர்கள் என்று பலரும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்த குடும்பதினத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர். கடந்த 17ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பே ஈஸ்ட் கார்டனில் நடைபெற்ற இந்த குடும்ப விழாவில், ஏறக்குறைய 800 பேர் கலந்துகொண்டனர். உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் 82வது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் இவ்விழாவில் இடம்பெற்றது. சமூகத்தை வலுப்படுத்தும் விதத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக ஏற்பாட்டுக் குழுவினரை அமைச்சர் பாராட்டினார்.
‘வலுவான குடும்பம், வலுவான தேசம்’ என்ற கருப்பொருளில் நடந்த இந்த நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களிடையே பிணைப்பை ஏற்படுத்துவது ஏற்பாட்டாளர்
களின் நோக்கம். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் நிலை மாறவேண்டும், அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும் என் றார் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஆலோசகர் திரு நசீர் கனி.
குடும்ப தினத்தில் ஸ்ரீ நாராயண மிஷன், ஜாமியா இல்லம் ஆகிய அமைப்புகளும் கலந்துகொண்டு கரம் கொடுத்தன. இந்திய முஸ்லிம் பேரவை, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், ‘மெண் டாக்கி’ போன்ற சமூக அமைப்புகளின் தலைவர்களும் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்தனர். அழைக்கப்பட்ட அமைப்புகள் ஆதரவு வழங்கியது மகிழ்ச்சி அளித்ததாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அமீர் ரோஷன் தெரிவித்தார். குடும்ப தினத்தைத் திட்டமிட இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் ஆனதாகவும் 15 பேர் கொண்ட குழுவும் தொண்டூழியர்களும் இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. பங்களிப்பாளர்கள், பொருளுதவி செய்தவர்கள், ஆதரவாளர்கள் போன்றவர்களின் பெரும்பங்கும் இதிலடங்கும் என்றும் திரு அமீர் கூறினார்.
குடும்ப தினத்தை சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்தாலும் நிகழ்ச்சியின் பின்னணியில் பல அமைப்புகள், நிறுவனங்கள், அறநிறுவனங்கள் போன்றவற்றின் ஆதரவு உண்டு என்றும் இந்த உதவி செலவை குறைக்க உதவியது என்றும் பகிர்ந்துகொண்டார் திரு கனி.
எதிர்பார்த்ததுபோல, நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறியது என்று திரு நசீர் கனி கூறினார்.
அதோடு, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இயலாதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உற்சாகம் அளித்தது ஏற்பாட்டு குழுவிற்கு மிகுந்த மகிழ்ச்சி என்று திரு அமீர் பகிர்ந்துகொண்டார்.
மக்களைக் கவரும் வண்ணம் அமைந்திருந்த மேடை நிகழ்ச்சிகள், கேளிக்கை நடவடிக்கைகள், அதிர்ஷ்ட குலுக்கு, விளையாட்டுகள் என்ற பலதரப்பட்ட அங்கங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியை, தொலைக்காட்சி பிரபலம் திரு புரவலன் தொகுத்து வழங்கினார்.
பொன்மணி உதயகுமார்