வீடற்றோருக்கு கிறிஸ்துமஸ் உணர்வை ஊட்டும் முயற்சியில் ‘லைஃப் சென்டர் சமூக சேவைகள்’ இறங்கியது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆதரவு தேவைப்படும் இப்பிரிவினருக்கு, தொண்டூழியர்கள் உதவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
நோய்த்தொற்றுக் காலத்தின்போது, வீடற்றோருக்கெனத் தங்களின் கதவுகளைத் திறந்தது இந்த லாப நோக்கமற்ற அமைப்பு.
அன்றிலிருந்து இன்றுவரை இவர்களுக்கு இந்த அமைப்பு தங்குமிடம் ஏற்படுத்தித் தந்ததோடு, ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் இவர்களுக்குப் பல விதமான நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.
அவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு, கடந்த 15ஆம் தேதி மாலையில், குடும்ப ஆதரவின்றி தவிக்கும் இவர்களுக்கு இலவச இரவுணவும் பண்டிகைக் கால குதூகலமும் கிடைத்தன.
இங்கு தொண்டூழியம் செய்து வரும் சிலர், கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாடியதோடு, அங்கு தங்குபவர்களை உற்சாகம் ஊட்டும் விதமாக பல விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தினர். அதைத் தொடர்ந்து, இங்கு இரண்டு ஆண்டு களாக தொண்டாற்றி வரும் சமூக சேவையாளர் திரு சாமுவேல் குமார், 58, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருவிவிலியத்தில் இடம்பெறும் இயேசுவின் கதைகளைக் கூறினார்.
“இவர்களின் வாழ்க்கைக்கு என்னால் முடிந்தவரை ஒளி ஊட்டுவேன். வாரந்தோறும் நானும் என் மனைவியும் இங்கு தொண்டூழியத்தில் ஈடுபடுவது என் மனதிற்கு திருப்தி அளிக்கிறது,” என்றார் திரு சாமுவேல்.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த 55 வயது திரு ராபர்ட் ஜோசஃப், இத்தனை ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, தான் சிறையில் இருந்ததை நினைவுகூர்ந்தார்.
சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், இந்த அமைப்பில் மூன்று வாரங்களாக தங்கி உள்ளார். பெற்றோரை இழந்த இவர், தன்னுடைய சகோதரியை அன்றாடம் தொடர்புகொள்கிறார்.
அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இதர நிகழ்வுகளும் தம்மைப் போன்றவர்களுக்கு வாழ்வில் ஒரு மாற்றத்தை அளிப்பதாகவும் சமுதாயத்தில் தம்மை ஏற்றுக்கொள்ள மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையைத் தருவதாகவும் அவர் கூறினார்.