சிராஜ் அஸீஸ், நஷிரா பர்வீன் என்ற இந்திய-பாகிஸ்தானிய தம்பதியினர் தொடங்கிய வீட்டிலிருந்து இயங்கும் வர்த்தகமான ‘மஹ்மூத்’ஸ் தந்தூர்’ இன்று நார்த் பிரிட்ஜ் ரோட்டில் ஒரு கடையாகி நிற்கிறது.
தங்களுக்கென்று சொந்தமானது என்று சொல்லிக்கொள்ள ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும் என்பது இருவருக்கும் நீண்டகால ஆசை.
இதற்கிடையில், 2020ல் நோய்ப்பரவல் முறியடிப்பு காலத்தின்போது இருவரும் தங்கள் முழு நேர வேலைகளை வீட்டுலிருந்து செய்துகொண்டிருந்தாலும், பொழுதைப் போக்குவதற்கு நிறைய நேரம் இருந்ததாகக் கூறினர்.
தம் இளம் வயதில் அவரது தந்தை மஹ்மூத் நடத்திவந்த தொடக்கப்பள்ளி சிற்றுண்டிக் கடையில் விற்பனை செய்த தந்தூரி கோழி மிகவும் பிடிக்கும் என்று நஷிரா நினைவுகூர்ந்தார்.
ஆக, கனவை நனைவாக்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி, தந்தையின் தந்தூரியை இன்றைய உணவு பழக்க வழக்கங்களுக்கு ஏற்றார்போல் புதுப்பித்து, அதனுடன் அருந்த தேநீரும் தயார் செய்து, உறவினர்கள், நண்பர்களிடம் விற்பனையை முதலில் தொடங்கினர்.
ஆனால் முயற்சி முதலில் நல்ல வரவேற்பை பெறவில்லை.
தந்தூரியில் அதிக உப்பு, தேநீரில் அதிக தண்ணீர் போன்ற கருத்துகளை நண்பர்களும் உறவினர்களும் தெரிவித்தனர்.
“முயற்சியே செய்யாமல் இருப்பதை விட, முயற்சி செய்து தோல்வி அடைவது மேல்,” என்ற மனநிலையில்தான் மனந்தளராமல் தொடர இருவருக்கும் ஊக்கமாக இருந்தது என்று நஷிரா கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவு புதுமையாகவும் இருக்க வேண்டும், அவர்களுக்குப் பிடித்திருக்க வேண்டும் என்ற புதிய நோக்கத்தோடு செயல்பட தொடங்கியபோதுதான் தந்தூரி துண்டை வழக்கம் போல் விற்காமல், பர்கராக விற்கலாம் என்ற எண்ணம் வந்தது இருவருக்கும்.
இந்தப் புதுமை அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
தந்தூரி விங்ஸ், மசாலா கலந்த ஃபிரைஸ் போன்ற மற்ற புதுமையான உணவு பொருள்களையும் கொண்டு வந்தனர்.
இருப்பினும், புதுமையின் காரணமாக ஒருபோதும் தங்கள் வேர்களை மறக்கக் கூடாது என்றும் இருவரும் கூறினர்.
“எங்கள் வர்த்தகத்தில் இருக்கும் ஒவ்வோர் உணவுப் பொருளும் சிங்கப்பூரர்களை ஈர்க்க புதுமையாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் இந்திய-பாகிஸ்தானிய உணவுக் கலாசாரங்களிலிருந்து ஏதேனும் ஓர் அம்சமாவது இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று சிராஜ் கூறினார்.
வர்த்தகம் மேன்மேலும் வளர்ச்சி அடைய, பிரபல ‘ஆர்ட்பாக்ஸ் சிங்கப்பூர் 2023’ திருவிழாவில் சாவடி வைத்து உணவு விற்க வாய்ப்பு கிடைத்தது.
அதுவரை உணவை விநியோகம் மூலம் மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்த அவர்களுக்கு முதல் முறையாக வாடிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்கள் உணவை ரசித்து சாப்பிடுவதை நேரில் பார்த்தது மிகவும் மனத் திருப்தியாக இருந்தது என்றனர்.
வாடிக்கையாளர்களோடு உரையாடி பழகிய அனுபவம், ‘மஹ்மூத்’ஸ் தந்தூர்’ஐ வீட்டிலிருந்து இயங்கும் வியாபாரத்திலிருந்து முழு நேர வர்த்தகமாக்க உத்வேகத்தை அளித்தது என நினைவு கூர்ந்தனர்.
தங்கள் முழு நேர வேலைகளை கைவிட்டுவிட்டு, இம்முயற்சில் முழு மனதாக இறங்கினர்.
சமூக ஊடக துறையில் வேலை செய்து கொண்டிருந்த சிராஜ், அங்கு பயன்படுத்தக்கூடிய உத்திகளை ‘மஹ்மூத்’ஸ் தந்தூர்’இன் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி மக்களை ஈர்த்தார்.
இதற்குமுன் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியராக இருந்த நஷிரா, தன் கற்பித்தல் திறன்களைக் கடையின் வேலையாட்களின் பணி கற்பித்தலில் பயன்படுத்துவதாகக் கூறினார்.
நஷிராவின் தந்தையின் பாதையில் சென்று அவரை பெருமைப்படுத்தியது மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களோடு ஒரு சிறிய சமூகத்தையே உருவாக்கியுள்ளதுதான் அவர்கள் சாதித்ததற்கான சான்று என்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடையைத் திறந்த சிராஜ், நஷிராவிற்கு பிற்காலத்தில் இன்னும் பல கிளைகளைத் திறப்பது நீண்ட கால இலக்காக இருந்தாலும், இப்போதைக்கு, வாடிக்கையாளர்களுக்குத் தரமான உணவு வழங்கி அவர்களை திருப்திப்படுத்துவதே முதன்மை இலக்காக உள்ளது என்றனர்.