இந்தியாவில் கிருமித்தொற்று அதிகரிப்பு; தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு
இந்தியாவின் கேரள மாநிலத்தில் புதிதாக அறுவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் மேலும் மூவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக இருந்தது.
கடந்த மாதம் கேரளாவில் கிருமித்தொற்று கண்ட மூவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் அங்கு மேலும் எட்டுப் பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மூன்று வயது குழந்தையும் ஒன்று.
கிருமித்தொற்று கண்ட மற்றவர்கள் ஜம்மு, டெல்லி, உத்தரப் பிரதேசம், புனே, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக ஏற்கெனவே ஊடகத் தகவல்கள் கூறியிருந்தன.
அண்டை மாநிலங்களில் கிருமித்தொற்று அதிகரித்து வரும் வேளையில், தமிழகத்திலும் கொரோனா கிருமித்தொற்று குறித்த அச்சம் வெகுவாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய தமிழகத் தென் மாவட்டத்தினர் 199 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசாங்கம் ஏற்பாடு
இந்நிலையில், ஈரானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அவர்களை மீட்க இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று நேற்று முன்தினம் ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றது.
முதற்கட்டமாக, நேற்று காலை 58 இந்தியர்களுடன் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
விமானம் 58 பேருடன் புறப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டார்.
அங்கிருந்து 529 இந்தியர்களின் நாசி திரவத்தைப் பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்து வந்தனர். பரிசோதனைக்குப் பிறகு அவர்களில் எவருக்காவது கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் தெரியவரும்.