சிங்கப்பூரிலிருந்து மதுரை சென்ற பயணிக்கு கொவிட்-19 தொற்று; தப்பிக்க முயற்சி
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற பயணிக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார்.
ஆனாலும், அவரது முயற்சி கைகூடவில்லை.
நாகர்கோவிலைச் சேர்ந்த அவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அவரைப் புதுவகை ‘ஓமிக்ரான்’ கிருமி தொற்றியுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்தப் பயணி சனிக்கிழமை டிசம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்ததாக தமிழக மருத்துவ, நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
"ஆனாலும், அவர் ‘ஓமிக்ரான்’ கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருத முடியாது.
அவர் இப்போது நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது பரிசோதனை முடிவுகளை மரபணு வரிசைப்படுத்தலுக்காக அனுப்பியுள்ளோம்,” என்று திரு சுப்பிரமணியம் கூறினார்.
‘ஓமிக்ரான்’ பரவிய, தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய அனைத்துலக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகின்றனர்.