பொருளியல் நெருக்கடியால் தனது குடும்பம் சொந்த இல்லத்தை இழந்தபோதும் தன்னம்பிக்கையைக் இழக்கவில்லை 24 வயது நிரம்பிய நளேந்திரன் ராமசாமி. வற்றாத தன்னம்பிக்கையின் பயனாகக் கடந்த மாதம் 30ஆம் தேதி இவருக்கு தேசிய இளையர் சாதனையாளர் தங்க விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் இந்த விருதுத் திட்டம் முக்கியமான ஒன்று என்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இவர் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் கணினி கட்டமைப்புப் பாதுகாப்பு தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டபோது, ஆசிரியர்களின் மூலமாகத் தேசிய இளையர் சாதனையாளர் விருதைப் பற்றி அறிந்து கொண்டார்.
விருதை பெற வேண்டும் என்ற உறுதியான விருப்பம் அவருக்குள் பிறந்தது. சமூக சேவை, புதுத் திறன்களைக் கற்றல், குடியிருப்பு ஒப்படைப்பில் ஈடுபடுதல், முகாம்களில் கலந்துகொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் அவர் முனைப்புடனும் துடிப்புடனும் ஈடுப்பட்டார். குடியிருப்பு ஒப்படைப்பிற்காக இவர் மங்களூருவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று இணையப் பக்கங்களை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
"நான் பேசும் ஆங்கிலத்தை அச்சிறுவர்கள் எளிதில் புரிந்துகொள்ளவில்லை. எனவே அவர்களிடம் உரையாட சற்றுத் தயக்கமாக இருந்தது. இருப்பினும், நான் கற்ற விஷயங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, திருப்தியாக இருந்தது," என்று தெரிவித்தார் நளேந்திரன். "படிப்பையும் சமூகப் பணிகளையும் சமாளிப்பது சவாலாக இருந்தபோதும் குடும்பத்தினரின் ஆதரவோடும் நண்பர் களின் உறுதுணையோடும் என்னால் தடைகளைக் கடந்து வெற்றி பெற முடிந்தது. வார இறுதி நாட்களில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் குடும்பத்துடன் அதிக நேரத்தை என்னால் செலவழிக்க இயலாமல் போனது," என்றார் நளேந்திரன்.
சென்ற மாதம் தேசிய சேவையை முடிந்த இவர், தற்போது தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கிறார். காவல் துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளதாக நளேந்திரன் தெரிவித்தார். 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுத் திட்டம் மாணவர்களிடையே பொறுமை, சுயசார்பு, சமூகத்துக்குத் திருப்பி அளித்தல் போன்ற பண்புகளை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப் பட்டது. "வாழ்க்கைப் பயணத்தில் கடந்துவரும் சவால்கள் மனிதனை செம்மைப்படுத்த உதவும். வாழ்க்கை சுலபமான ஒன்று அல்ல. ஆனால் திடமான மனப்பான்மை இருந்தால் வாழ்க்கை சுவையாக அமையும்," என பூரிப்புடன் சொன்னார் நளேந்திரன்.
இவ்வாண்டு தேசிய இளையர் சாதனையாளர் விருதுபெற்ற தொழில்நுட்ப கல்விக் கழக மாணவர்கள் 62 பேரில் ஒருவர் நளேந்திரன் ராமசாமி. படம்: நளேந்திரன் செய்தி: நித்திஷ் செந்தூர்