வில்சன் சைலஸ்
எதிர்காலம் பற்றிய தெளிவு இல்லாமல் 2010ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் படிப்பைப் பாதியில் கைவிட்டு வெளியேறியவர் சரண்நாத் தேவநாதன். இப்போது சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் மின்னணுவியல் பொறியியல் துறையில் பயின்று வரும் இவர், தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார். தேசிய சேவையின்போது கிடைத்த அனுபவங்களே தமக்குள் ஏற்பட்ட மாற்றங்களுக் குக் காரணம் என்றார் சரண், 23. கடற்படையில் சேவையாற்றியபோது 'முழுநேர ராணுவ வீரராகலாம்' என்ற எண்ணம் கொண்டிருந்த சரணிடம் கல்வியைத் தொடரும்படி பலரும் ஊக்குவித்தனர். "நல்ல வேளையாக மீண்டும் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் சேர்ந்தேன். வாழ்க்கையில் முன்னேற கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது உணர்ந்துள்ளேன்," என்றார் அவர். தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பயின்றபோது சிறந்த சேவை நட்சத்திர விருது, கல்வி சாதனை விருது, புறப்பாடத் தங்க விருது, துறைசார்ந்த விருது எனப் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார் சரண். அப்பட்டியலில் இப்போது சிண்டாவின் உன்னத விருதும் இணைகிறது.
சிண்டாவின் உன்னத விருது பெற்ற (இடமிருந்து) கிளாரா லாவண்யா அப்பொலோஸ், சரண்நாத் தேவநாதன், வள்ளியம்மை மீனா. படம்: சாவ் பாவ்