உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் உலகத் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன. அண்மையில் வெளியிடப்பட்ட 'டைம்ஸ்' உயர்கல்வி அனைத்துலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் 24ஆம் இடத்தையும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 54வது இடத்தையும் பிடித்தன. சென்ற ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இந்தத் தரவரிசையில் 26வது இடத்தைப் பிடித்திருந்தது. ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகம் என்ற தகுதியையும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
'குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' அனைத்துலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் சென்ற ஆண்டைப்போலவே முறையே 12வது, 13வது இடங்களைத் தக்கவைத்துக் கொண்டன. உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் உள்ள தரம் மிகுந்த கல்வியாளர்கள், இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் தாக்கம் ஆகியனவே தரவரிசையில் அவை முன்னேறக் காரணம் என்று இவ்விரு பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த இரு பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டுத் திறனாளர்களை வெகுவாக ஈர்ப்பதாக 'டைம்ஸ்' தரவரிசையின் ஆசிரியர் திரு ஃபில் பேட்டி கூறியுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் வலுவான ஆய்வுச் சூழலைக் கொண்டுள்ளதாகவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அதன் ஆய்வுப் பணிகளின் தாக்கங்களால் நிறுவனங்களிலிருந்து திட்டப் பணிகளையும் அதன் தொடர்பில் நிதியைப் பெறுவதிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும் திரு ஃபில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆய்வுக்காகப் பயன்படுத்துவதாகவும் இது சீனா, பிரிட்டனைவிட அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.