சென்னை: தமிழகத்திலுள்ள தமிழக அரசின் 'டாஸ்மாக்' மதுக் கடைகளை மூடுவதற்கு வலியுறுத்தி 'மக்கள் அதிகாரம்' எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் பெண்கள் பலர் காயமடைந்தனர். காவல்துறையினரின் தடியடியால் பல பெண்களின் மண்டை உடைந்ததாகக் கூறப் படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தலை முடியைப் பிடித்து காவல்துறையினர் இழுத்துச் சென்ற கொடூரமும் அரங்கேறியது. போராடிய பெண்களை ஈவு இரக்கமற்ற முறையில் தாக்கிய காவல்துறையினருக்குப் பொதுமக்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் மீதும் காவல்துறையினர் கண் மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் மயங்கியதைக் கண்டு அவனது உறவினர்கள் கதறியழுத சம்பவம் பல்வேறு தரப்பினரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. அச்சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் கைது செய்ய ஆண் காவல்துறையினரை ஈடுபடுத்தி தமிழக அரசு அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளது பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது. பொன்னேரி அருகே டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போட அந்த அமைப்பினர் முயன்றனர்.