புதுவை: பதவியேற்பு விழாவின் போது தனது காலில் விழுந்த பெண் 'எம்எல்ஏ'யிடம் பிறர் காலில் விழுவது தவறு என அறிவுறுத்தினார் புதுவை ஆளுநர் கிரண் பேடி. இதை யடுத்து பெண் எம்எல்ஏ காலில் கிரண் பேடியும் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை ஆளுநராக கிரண் பேடி நேற்று முன்தினம் பொறுப் பேற்றார். அவர் பதவியேற்பு நிகழ்வில் அரசு உயரதிகாரிகள், அம்மாநில முக்கிய பிரமுகர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பதவியேற்புக்குப் பின் ஆளுநர் கிரண் பேடிக்கு அவர்கள் பூங் கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர். இச்சமயம் புதுவை சட்டப் பேரவை உறுப்பினர்களில் சிலர் கிரண் பேடியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற முயற்சித்தபோது, அவர் உடன டியாக அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
"மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பிறர் காலில் விழுவது சரியல்ல. அவர்கள் மக்களுக்காக மட் டுமே சேவை செய்ய வேண்டும்," என கிரண் பேடி அறிவுறுத்தினார். இதையடுத்து யாரும் அவரது காலில் விழவில்லை. ஆனால் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ விஜயவேணி மட்டும், புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சட்டென எதிர்பாராத வகையில் காலிலும் விழுந்து வணங்கினார். உடனடியாக சுதாரித்துக் கொண்டு விஜயவேணியின் தோள்களைப் பற்றி, அவரை எழுப்பிய கிரண் பேடி, மீண்டும் தன் கருத்தை வலியுறுத்தினார். மேலும், சட்டென குனிந்து 'எம்எல்ஏ'யின் காலைத் தொட்டு வணங்கினார். இதனால் பதறிப்போன விஜயவேணி, ஆளுநர் கிரண் பேடியை உடனடியாக தூக்கி நிறுத்தியதுடன், இனி பிறர் காலில் விழப்போவதில்லை என உறுதியளித்தார். அப்போது அவரது கன்னத்தை தன் கரங்களால் வருடி வாழ்த்துத் தெரிவித்தார் கிரண் பேடி. இச் சம்பவம் பதவியேற்பு நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்தியது.